Wednesday, May 07, 2014

தமிழுக்கு அமுதென்று பேர்



வீட்டுப் பொறுப்பெனும் பாரம் - கொஞ்சம்
விட்டு நலம்பெற வேண்டி,
பாட்டு தருஞ்சுவை நாடி - தமிழ்
பாடும் கவிபலர் கூடும்
கூட்டம் நடைபெறும் மன்றில் - நானும்
கொஞ்சம் தமிழமு துண்பேன்!
வேட்டு வெடித்திடும் வீட்டில் - எனினும்
வேறொன் றதற்கிணை யாமோ?

நேற்று நடந்ததோர் மன்றின் - நிகழ்வு
நெஞ்சி லலையிடும் போது
ஆற்றல் குறைந்தது மாறி - தேவர்
அமுது பருகிய தென்ன
ஊற்றுக் கிளம்பிடும் சக்தி - மேலும்
உணர்வு முயர்வுறு மாங்கே.
ஆற்றல் மிகுந்தமிழ் அமுதே! - அதிலோர்
ஐய மிலையெனச் சொல்வேன்.

(சென்னை,வாணுவம் பேட்டை,
 திருவள்ளுவர் இலக்கியமன்றத்தில் பாடியது.)

No comments: