Thursday, December 04, 2014

கோடை விடுமுறைத் தொடக்கம்



நோட்டுப் புத்தகம் உணவென்று
... நிறைந்து வழியத் தோள்சேர்த்து
மூட்டை தூக்கி நடக்காமல்
... மூலையில் விட்டு வைத்திடலாம்.
வீட்டுப் பாடம் பொறுப்பென்று
... வேலை எதுவும் கிடையாது.
பாட்டுப் பாடி மகிழ்ந்திடலாம்.
... பலருடன் ஆடிக் களித்திடலாம்.


நாட்டுப் பாடல் பாடுதற்கும்
... 'நாளொரு நீதி' கேட்பதற்கும்
கூட்டி வெளியில் நிறுத்திவைக்கும்
... கொடுமை இனிமேல் கிடையாது.
போட்டித் தேர்வுகள் கிடையாது
... பொழுதை இனிதாய்க் கழித்திடலாம்.
பாட்டுப் பாடி மகிழ்ந்திடலாம்
... பலருடன் ஆடிக் களித்திடலாம்.


பாட்டி தாத்தா பார்ப்பதற்குப்
... பயணம் ரயிலில் சென்றிடலாம்.
கேட்கக் கேட்கத் தின்பண்டம்
... கிடைக்கும் நன்றாய்த் தின்றிடலாம்.
ஓட்டி சைக்கிள் தெருவினிலே
... ஒவ்வொரு நாளும் பழகிடலாம்.
பாட்டுப் பாடி மகிழ்ந்திடலாம்
... பலருடன் ஆடிக் களித்திடலாம்.




 பாரதி கலைக் கழகம். அழ. வள்ளியப்பா நினைவரங்கம். குரோம்பேட்டை இலக்குமி அம்மாள் மேல் நிலைப் பள்ளி. 22.11.2014

No comments: