Wednesday, September 09, 2009

பாரதி இன்று வந்தால்


(பாரதியாக மாறிப் பாடியது)



ஒளிரு கின்ற தீபமாக உயர்ந்து பார்க்க எண்ணினேன்
இளைய பார தத்தினாய் எங்கு சென்று வீழ்கிறாய்?
விளையு மென்று நாற்றுவிட்டு நட்டு வைத்த பயிரெலாம்
களைக ளாக முட்களாகக் காண நெஞ்சு நோகுதே!

திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானமெய்தி வாழ்வ மென்று பாடினேன்.
திறமை யென்று ஏதுமில்லை தீமை யொன்றே காண்கிறேன்.
தேர்ந்த கல்வி ஞானமொன்றும் தேவை யில்லை என்கிறீர்!

சாதி சமய மென்றுநீங்கள் சண்டை வேண்டி நிற்பதேன்?
மோதல் தேடி அலைவதிங்கு மொத்த மக்கள் நோக்கமோ?
ஆதி வேதம் காட்டுகின்ற அன்பு என்று நீங்குமோ
நாதி யற்றுப் போகுமன்று நாடு கண்டு நோகுவீர்!

வங்க நீரின் மிகையினால் வறண்ட மைய மண்ணெலாம்
பொங்கு வளமை கான்பதென் போன ஜன்மக் கனவுதான்.
இங்கு நதிகள் இணைவது என்று நிகழ்வ தாகுமோ?
எங்க ளிளைய ராற்றலால் எய்த லரிது மாவதோ?

ஏழ்மை தாழ்மைப் பேயெலாம் எளிதிற் தீய்ந்து மாயவும்,
ஊழ லற்ற ஆட்சிதன்னில் ஊரும் நாடு முயரவும்,
ஆழ்ந்த ஞான மெய்திமக்கள் அன்பு கொண்டு வாழவும்,
தாழ்ந்து பாதம் வேண்டினேன். தருவ தாக நீயருள்.
.....ஓம் சக்தி!......


நம் உரத்த சிந்தனை. செப்.2006

Sunday, September 06, 2009

ஒரு பெரும் செயல் செய்வோம்

வேத கால மாதியாக வேறு வேறு என்றுநூறு
சாதி கொண்ட மனிதரன்பிற் சேர்ந்து வாழ்ந்த தில்லையா?
போதி தந்த ஞானதீரன் புத்தன் வாழ்ந்த நாட்டினர்
மோதி வீழ்தல் மாற்றிமீண்டும் மனித நேயம் காணுவோம்

ஏழை வாழ்வு என்னவாகும் என்ற எண்ண மின்றியே
ஊழல் லஞ்சம் என்று,ஊரைக் கொள்ளை கொண்டு தின்கிற
பாழும் ஆசைப் பேய்க ளிங்கு பாதம் நாட்டி யாடுதே!
கோழை யென்ன நாமிருந்தால் கொன்று தீர்க்க லாகுமோ?

காதல் மதுவின் மீதுகொண்டு கற்ற கல்வி பண்பெலாம்
போதை கொண்டு போகவிட்டுப் பொருளும் போக நிற்பவர்
மீத முள்ள வாழ்விலேனும் மீண்டு வருதல் வேண்டிநாம்
ஏதும் செய்ய முயன்றிலோம். எங்கு நாடு போகுமோ?

மெள்ள மெள்ள நீர்மைமாறி மேனி வாடும் பூமியின்
வெள்ள மோடிச் சீரழிக்கும் வேறு மாநி லங்களில்
உள்ள நீரின் பாதைமாற்றி யோடு மாறு செய்யவே
உள்ள முள்ளோர் ரொன்றுசேர ஊரும் நாடு முயருமே!

காலை நேரம் வீதியோரம் காணும் மனித எச்சமும்
சாலை மீது வாகனங்கள் சீறி யோடும் சத்தமும்
ஆலை வீசு நச்சுவாயு அச்ச மென்று மொத்தமும்
நளை யேனும் மாறவேண்டும் நாம்மு னைந்து மாற்றுவோம்

தின்று தின்று தூங்கிநாளைத் தொலைத்து வாழ்த லுண்மையில்
பன்றி வாழும் வாழ்வென்று பகர்தல் கேட்ட தில்லையோ?
ஒன்றி லேனும் வென்றுகாட்ட உறுதி யோடு முயலுவோம்.
என்றும் பூமி மீதுமக்கள் ஏற்ற நின்று வாழுவோம்.

(பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு நடத்திய அமரர். கவிமாமணி நா.சீ.வ நினைவுக் கவிதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது.)

Tuesday, August 04, 2009

தமிழா தமிழ் வளர்க்க வா

கன்னடத்தை மற்றும் கவின்தெலுங்கின் சீர்தன்னை
மண்ணில் மலையாள மாண்பதனை- உன்னால்
அமிழ்தத் தமிழ்விஞ்சும் ஆற்றலுற வேண்டும்
தமிழா தமிழ்வளர்க்க வா.

மதுரைத் தென்றல். -வெண்பாப் போட்டி. (ஜனவரி 2001)

இறப்பென்றும் இல்லாத் தமிழ்

செம்பொருள்சேர் வள்ளுவமும் சிந்தா மணிநயமும்
கம்பன் கவியழகும் கண்டவர்கள், வாழ்த்தச்
சிறக்கும் வளம்பெருகிச் சீரோங்கி நிற்கும்
இறப்பென்று மில்லாத் தமிழ்.

மதுரைத் தென்றல். -வெண்பாப் போட்டி. (ஆகஸ்ட் 2000)

Monday, August 03, 2009

தன்னிகர் இல்லாத் தமிழ்

தன்னை வணங்கித் தமிழில்நூல் செய்வோர்க்கு
அன்னை யெனநின்றே யருள்செய்யும்- என்றுமிளங்
கன்னியெனத் தோற்றம் கவிதையினிற் காட்டிடுமென்
தன்னிக ரில்லாத் தமிழ்.


மதுரைத் தென்றல்: வெண்பாப் போட்டி-(டிசம்பர் 1999).

குறள் இலக்கணக் குறள்.

வெண்டளையிற் சீரேழும் வெண்பாவிற் போலீறும்
கொண்டு மலரும் குறள்.

'கவிதை' மாத இதழ். -குறள் வெண்பாப் போட்டி(ஜூன் 1989).

Sunday, July 19, 2009

இந்து சமயத்தில் பொங்கலின் பெருமை

1. உத்தராயனமும் பொங்கல் திருநாளும்

பேரொளியின் பிறப்பிடமாய்க் கதிர்கள் வீசிப்
பெருநெருப்புக் கோளமெனத் தோற்று கின்ற
காரிருளை மாய்த்தொழிக்கும் கதிரோன் தேரின்
காலத்துச் சக்கரங்கள் சுழலும் போது
பாரிதனிற் பகலிரவு நாளென் றோடிப்
பலகோடி ஆண்டுகளாய்ப் பரிண மிக்கும்.
சூரியனின் காலகதி நொடிபி ழைப்பின்
சொல்லரிய மாற்றங்கள் கோடி நேரும்.

பகுத்தமைத்த ராசிகளில் தனுசு நீங்கிப்
பரிதியவன் தன்வழியே மகரந் தன்னில்
புகுநிலையில் தேவர்களுக் கிரவு நீங்கும்
பூமியிலே தைமாதம் பிறக்கு மென்று
வகுத்துரைத்த சான்றோர்கள் அயனம் மாறும்
உயர்வான உத்தரத்தின் தொடக்க நாளை
மிகுத்துரைத்துப் பொங்கலெனும் திருநா ளாக
மேன்மையுறக் கொண்டாட விதித்து வைத்தார்.

பாரதப்போர் பத்தாம்நாள் களத்தி லன்று
பாண்டவரை எதிர்கொண்ட கௌர வர்பால்
வீரத்துச் சிறந்திருந்தும் விதியின் வலியால்
வீடுமரை அருச்சுனனின் சரங்கள் சாய்க்க,
பேருலக நற்கதியை அடைய வேண்டிப்
பெருமைமிகு உத்தரத்தின் அயனந் தோன்றக்
கார்வண்ண நெடுமாலை மனத்தி ருத்திக்
காத்திருந்த சிறப்பறிவர் உலக மக்கள்.

வெகுநாளின் பழையபொருள் கழித்து, வீட்டை
வெள்ளையிலே அலங்கரித்துச் செம்ம ணோடு
புகுவாசல் நிலைதிருத்திக் கோல மிட்டு,
புத்தாடை இடையுடுத்திப் புளகம் மிக்கு,
மிகவிளைந்த புதுநெல்லின் அரிசி கொண்டு
மெல்லியலார் புதுப்பாலில் பொங்க லிட்டு,
சுகவாழ்வு பெறவேண்டிச் சுற்றம் சூழ
சூரியனை வழிபட்டுப் படையல் செய்வார்.

2. இந்திரனும் போகிப் பண்டிகையும்

செங்கமல லக்குமியின் நோக்கம் பெற்று
சிறப்புற்ற இந்திரனின் உலகந் தன்னில்
சங்கமென்றும் பதுமமென்றும் நிதியி ரண்டு,
சாத்திரங்கள் போற்றுகின்ற காம தேனு,
எங்குமிலாக் கல்பதரு, இச்சை தீர்க்கும்
எழில்மிக்க சிந்தாமனி ரத்தி னக்கல்
தங்கியிவை தருகின்ற இன்பந் துய்க்குந்
தன்மையினால் இந்திரனைப் 'போகி' என்றார்.

இந்துமதம் உலகத்தின் இயக்கத் துக்கே
இன்றியமை யாதனவாய்க் கருது கின்ற
அந்தரமும்,நிலமண்ணும், உலகு காக்கும்
அருங்காற்றும், குளிர்நீரும் மற்று முள்ள
செந்தீயாம் அழலுமெனப் பூத மைந்தின்
செயல்வகையைத் தேவர்களின் வேந்த னான
இந்திரனின் கட்டளையால் நிகழ்வ தென்று,
இயம்பிடுத லறியாதார் யாரு மில்லை.

மண்ணுலகி லறஞ்செழிக்க, உயிர்கள் வாழ,
மரஞ்செடிகள் தழைத்திருக்க, நாட்டி லெங்கும்
உண்ணுநீர் வளம்பெருகி வாய்க்கா லோடி,
உழுதவயல் நிலம்பாய்ந்து, உயர்ந்து நின்று
கண்கவரும் பயிர்விளைவைக் கதிர றுத்துக்
களிக்கின்ற உழவர்நிலை காண வேண்டின்
விண்நிறைந்த கருமுகிலா லாகும், அன்றி
வேறுவழி நானிலத்தில் இல்லை யன்றோ?

கங்குலெனில் ஒளிகாக்கும். உலகை என்றும்
கடுவெம்மை வறட்சியெனில் மழையே காக்கும்.
திங்களுக்கு மும்முறையும் மாரி பெய்து
தீங்கின்றி நாடெல்லாஞ் செழிக்க, வெள்ளை
வெங்களிற்று வேந்தனவன் விருப்பா லாகும்.
விளைநிலங்கள் சிறக்குமென நாட்டு மக்கள்
இங்கவற்கு மார்கழியின் இறுதி நாளில்
இயற்றுமொரு பூசையினால் மகிழச் செய்வார்.

3. மாதவனும் மாட்டுப் பொங்கலும்.

பாற்கடலில் பள்ளிகொண்ட பரமன் முன்பு
பாரதப்போர் நிகழுகைக்காய் மண்ணில் வந்து
தோற்றத்தில் ஆய்ச்சியரின் கோகு லத்தில்
துருதுருத்த குழந்தையென வளரு நாளில்
காற்சலங்கை சப்தமிட ஓடி வெண்ணெய்
களவாடி உண்டதெலாங் காட்டு கின்ற
ஏற்றமிகு ஆழ்வார்கள் பாசு ரங்கள்
எடுத்தியம்பும் லீலைகளில் ஒன்று காண்போம்.

காய்ச்சியபாற் பொங்கலொடு நெய்யுந் தேனும்
கற்கண்டுச் சுவைக்கனியும் பலப டைத்தே
ஆய்க்குலத்தார் மழைகருதிப் பூசை யிட்டார்.
அதனாலே இந்திரனுங் கர்வங் கொண்டான்.
வேய்ங்குழலோன் இந்திரனின் அகந்தை முற்ற
வேரறுத்துச் சீர்திருத்த எண்ணங் கொண்டு,
ஆய்க்குலத்தார் பெருவாழ்வு நிலைக்க வேண்டின்
ஆநிரைக்குப் பூசையிட ஆணை யிட்டான்.

தன்பெருமைச் சிறப்பழிந்த தேவர் வேந்தன்
தனக்குற்ற தாழ்ச்சியினாற் கோபங் கொண்டு
மண்மீது வாழுகின்ற மனிதர் மற்றும்
மரஞ்செடிகள் மிருகங்கள் உயிர்க ளெல்லாம்
துன்புறுமோர் நிலைகண்டு மகிழு தற்காய்த்
தொடர்மழையால் கோகுலத்தைத் துயரு ருத்த
விண்படிந்த கருமுகில்கள் முழங்கி மின்ன,
வீழ்வனவாய்ப் பெருமழையைத் தோன்றச் செய்தான்.

பிழைப்பதற்கு ஆயரெலா மொன்று கூடி
பெருமாயன் கண்ணனையே வேண்டி நிற்க,
தழைதருவி னொருமலையை நிலைபெ யர்த்துத்
தன்கரத்துப் பெருங்குடையாய் உயர்த்தி, வீழும்
மழைதடுத்து, உயிரினங்கள் அனைத்து மங்கே
மறைந்தொதுங்க இடமளித்துக் காத்த கண்ணன்
பிழையுணர்த்தி, இந்திரனின் கர்வம் நீக்கிப்
பெருமகிழ்வால் பூவுலகம் பொலியச் செய்தான்.

நீராட்டிப் பசுக்களுக்கு மஞ்சள் பூசி,
நெற்றியிலே குங்குமத்தாற் பொட்டு மிட்டு,
கூராக்கிக் கொம்புகளில் வர்ணம் பூசி,
குவிகின்ற பூணிட்டு, மாலை சூட்டி,
சீராக ஒலியெழுப்பும் மணிகள் கட்டிச்
சிங்காரம் பலசெய்து பொங்கல் வைத்து,
ஏராள மானவர்கள் கூடி யன்று
எடுத்திட்ட பூசையின்று மட்டுப் பொங்கல்.

4. காப்புக் கட்டுதல்

தோற்றத்தால் நோக்குகின்ற திசையால் மற்றும்
தன்னுடைய வாகனத்தா லுடையா லெல்லாம்
மாற்றங்கள் விளைவித்துப் பீட ழித்து
மன்னுலகில் பஞ்சத்தைத் தோற்று விக்கும்
ஏற்றமிலாத் தேவதையாம் சங்க ராந்தி
ஏறிட்டுத் தம்வீட்டை நோக்கா தேக
நாற்றமிலாப் பீளைமலர் வேம்பின் இலைகள்
நன்மைக்காய்க் கூரைகளிற் கட்டி வைப்பர்.

5. வாழ்த்து

உண்டான மதநூல்கள் உரைப்ப தெல்லாம்
உணராத பலருண்டு இந்த நாட்டில்.
பண்டிகையாய்க் கொண்டாடும் பொங்கல் நாளைப்
பற்றியொரு தனியியக்கம் உண்மை மாற்றிக்
கண்டபடி பேசிவரு மிந்த நாளில்
கவிமன்றம் முன்வந்து போட்டி வைத்துத்
தொண்டாற்றும் செயலறிவேன். இறையை நானுந்
துதிக்கின்றேன் உமக்கருள வேண்டு மென்றே!


(காஞ்சிபுரம் இந்து தமிழ்க்கவிஞர் மன்றம்- 1984- பொங்கல் திருநாள் கவிதைப் போட்டியில் பரிசு பெற்றது.)

கலவையில் நடந்த விழாவில்,காஞ்சி ஆசார்ய சுவாமிகள் மூவரையும் ஒன்றாகத் தரிசித்துப் பாடிய வெண்பா.

தோற்றத்தைக் காண்போர் துயர்விலகும், ஆசிபெறின்
கூற்றை விலக்கிடவுங் கூடுமருள் நோக்கொன்றே
கோள்சாரம் மாற்றிக் குறை தீர்க்கும். அம்மூவர்
தாள்பணியு மெந்தன் தலை.

Monday, June 22, 2009

இந்து மதத்தில் வேற்றுமையில் ஒற்றுமை


ஆயிர மாயிர மாண்டு களாய் - இங்கு
ஆதி மதமென வேர்ப ரந்து
பாயு நதிக்கரைப் பர்வத மீதிலும்
பள்ளம் சமவெளிப் பகுதி யெலாம்

ஆயிர மாயிர விழுதி றக்கி - ஓர்
ஆல மரமெனத் தழைத்தி ருந்து
காயும் பிறமத வெம்மை தடுத்திட
காலம் விரித்தநி ழற்கு டையே!

சாம யசுரென ருக்கெ னவும்- இன்னும்
சாற்று மதர்வண வேத மென்றும்
ஓமம் வளர்த்தலும் மந்தி ரங்கள்
ஓதி நிதம்செயும் பூசை களும்

நாமவை ஏற்றநற் கொள்கை வழிதனில்
நாலென வைந்தென வாகி டினும்
பூமியில் வாழ்கிற மக்க ளுக்கு - ஒரு
புண்ணிய நற்கதி நல்கி டுமே!

கோவில் குளமெனக் கட்டி வைத்து, - பல
கும்பிடு தெய்வங்கள் ஆக்கி வைத்து
ஓயும் வழியில்லா மன்த்த டக்கி- அங்கு
ஒன்றி இறைநிலைப் பேரொ ளியில்

தோயும் வகையினில் செய்ப யிற்சி - அதில்
துன்ப மொழித்திடும் நோக்க மொன்றே!
பாயு நதிகளோ வெவ்வே றவையிப்
பாரினில் சேரிடம் ஓர்க டலே!

பார்க்கு மிருவிழித் தோற்ற மெலாம் - பிழை
பாரி லிருக்கிற பொருள ணைத்தும்
கூர்த்த மதியுடைக் கொள்கையிற் சீரியர்
கூறிய தத்துவப் ப்ரம்ம மன்றோ?

சாற்றிய ப்ரம்மமும் உணர்ந்த வர்க்கு
சட்டென மாயையை நீக்கி டுமே!
வேற்றுமை தன்னிடைத் தோற்றி டினும்- பொருள்
வேறல்ல ஒன்றெனக் காட்டி டுமே!

வேதம் முதலுள மீமாம்ச சாத்திரம்
வேறுள வாகம நூல்க ளெலாம்
பேதங் களைப்பல பேசி டினும்- பெரும்
பேறென நாமவை பெற்ற செல்வம்.

மத்ஸ்யம் முதலிய பத்தவ தாரமும்
மாதவன் செய்த வையே.- அவன்
தத்துவ கீதையில் தர்ம நெறிமுறை
யுத்த களந்தனில் தந்த வனே!


காஞ்சீபுரம் இந்து தமிழ்க் கவிஞர் மன்றத்தின் நவராத்திரி கவிக்கோவைப் போட்டியில் பரிசு பெற்றது. (அக். 1982)

Friday, June 19, 2009

விண்முட்ட ஏறும் விலை

முன்னர் சிவனார் முடிதேடி நான்முகனும்
அன்னம் உருக்கொண்டு ஆகாயம் சென்றதுபோல்
அண்ணல் முடிகாணும் ஆர்வந்தான் கொண்டுளதோ
விண்முட்ட ஏறும் விலை?


தினமணி கதிர்- வெண்பாப் போட்டி (1981)

ஆற்றல் உடைய(து) அரசு

உற்ற இடுக்கண் உணராது; ஓயாது
கற்ற நெறிமுறைகள் காத்திருக்கும்;- வெற்றிபெறக்
கூற்றெதிர் வந்தாலும் கொள்கையில் மாறாத
ஆற்றல் உடைய(து) அரசு.


இளந்தமிழன் -வெண்பாப் போட்டி (1973)

Monday, June 15, 2009

காசுக்கே விற்றுவிட்டோம் காண்

காசுக்கு வாங்கிக் கடன்பட்டும் தீபத்தை
வாசித்தோம் பின்னர் வழக்கம்போல்- தூசிதட்டி
வீசைக் கெடுப்பவன் வீதியிலே வந்தபோது
காசுக்கே விற்றுவிட்டோம் காண்


தீபம்- வெண்பாப் போட்டி- டிசம்பர் 1971

மாற்றம் வரவேண்டும்

வான மளக்கிற விஞ்ஞான
வளர்ச்சி யொருபுற மிருந்தாலும்
நாணம் இழந்து தெருவோரம்
நகர்ப் புறமெங்கும் நாற்றமுற
வீணர்கள் செய்யும் சிறுசெய்கை
வெட்கக் கேடென உணராரோ?
பேணும் உடல்நலம் பாதிக்கும்
பெரிதாய் மாற்றம் வரவேணும்.

மூன்றாம் வகுப்புத் தேர்வுக்கு
முழுத்தாள் கணினி மென்பொருளாம்
நான்காம் வகுப்பில் அசைன்மென்டாம்
நால்வர் செய்யும் ப்ராஜெக்டாம்
வேண்டும் கல்வி வளர்ச்சியெலாம்
வேண்டாம் என்போர் யாருமிலை.
காண்போர் மதிக்கும் பண்பாட்டைக்
கற்றுத் தருவது எங்கய்யா?


மனித நேயம் ஆக.2003

Thursday, June 11, 2009

மால் உகந்த மாலை


ஆல மரத்திலையின் - நடுவே
அன்று துயின்றபரன்
பால முகுந்தனென - வந்து
பாரை மயங்கவைத்தான்.
கோலக் கருவிழியும் - குழல்
கொஞ்சும் உதட்டொளியும்
நீல நிறத்தழகும் - கோதை
நெஞ்சில் வரைந்திருந்தாள்.

காலைக் கடமைகளில் - ஒன்றாய்க்
கதிர் வருவதன்முன்
சோலைச் செடிகொடியில் - மலர்கள்
சேரப் பறித்துவந்து
மாலன் அரங்கனுக்கு - நல்ல
மாலை தொடுத்துவரும்
ஆலய நற்பணியில் - தந்தை
ஆழ்ந்து மகிழ்ந்திருந்தார்.

பாடிச் சிரித்தபடி - தினமும்
பாவை நறுமலர்கள்
தேடித் தொடுத்ததனைத் - தன்னிரு
தோளில் மகிழ்ச்சியுடன்
சூடி அவனழகில் - தனது
சற்றுக் குறைந்திருக்க
ஆடி முகம்பார்த்துத் - திருத்தி
அழகு செய்துகொள்வாள்.

கோதை செயல்முழுதும் - ஒருநாள்
கண்டு துடித்தவராய்
"பேதை தவறிவிட்டாய் - பெரும்
பிழைநீ செய்துவிட்டாய்
பாதக மாகியதே" - என்றார்
பதறி நின்றுவிட்டாள்.
மாதவன் மார்பினுக்குப் - புதிதாய்
மாலை தொடுத்துவைத்தார்.

"காலை முறைதனிலே - சாற்ற,
கண்ணனின் தோளிணைகள்
மாலை மறுத்ததனால் - அதனை
மலரடி யிட்டுவைத்தோம்"
ஆலயம் சென்றவுடன் - செய்தி
அர்ச்சகர் வாயறிந்தார்.
மாலுக் கிழைத்தபிழை - எதுவும்
மனதிற் தோன்றவில்லை.

வாடி அமர்ந்தவர்க்கு - இரவில்
வந்த கனவினிலே
கோடிக் கதிரொளியின் - இடையே
கொண்டலின் வண்ணனவன்
"சூடிக் கொடுத்தவளின் - மாலை
சூடி மகிழ்ந்திருந்தேன்.
கோடி யுடுத்தவளைக் - கோவில்
கொண்டு தருக"வென்றான்.

கோதை மகிழ்ந்திருந்தாள் - தந்தை
கொஞ்சம் தளர்ந்திருந்தார்.
பாதை தனக்கதுவாய் - அன்றே
பாவை தெளிந்திருந்தாள்.
வேத முழக்கிடையே - நல்ல
வேள்விகள் தன்னிடையே
கோதை கரம்பிடித்து - அரங்கன்
கோவிலுள் சென்றுவிட்டான்.



மதுரைத் தென்றல் வீதியுலா-15 ஜனவரி 2001.

Monday, May 11, 2009

நாமேதும் செய்ததுண்டா?

செந்தமிழின் சிறப்பைப் பற்றிச்
சிந்தனைப் பட்டி மன்றம்.
சந்தமிகு கம்பன் பாட்டைச்
சான்றாகக் காட்டிச் சென்றார்.
சிந்தையை அள்ளு கின்ற
சிலம்பினைப் பற்றிச் சொன்னார்.
எந்தமிழின் குறளைப் போல
எம்மொழியில் நூலுண் டென்றார்?

வந்தவர்கள் சாலை யோரம்
வாய்பிளந்து கேட்டு நின்றார்.
எந்தப்பிற மொழியும் என்றும்
இனைதமிழ்க் காகா தென்ற
அந்தவுரை முடிந்த போது
ஆறாண்டு நிறைந்தி டாத
எந்தமயன் மகன் கேட்டான்
இவரென்ன செய்தா ரென்று.

அன்றவர்தம் திறமை கொண்டு
அரியபல நூல்கள் யாத்து
நின்றுலகில் தமிழை என்றும்
நிலைத்திருக்கச் செய்தா ரன்றோ?
தின்றுவெறும் பொழுது போக்கித்
தெருவோரம் மேடை போட்டு
நின்றுபழம் பெருமை பேசும்
நாமேதும் செய்த துண்டா?


மதுரைத் தென்றல் வீதியுலா 19 நவம்பர் 2001.

Sunday, May 03, 2009

மனிதரை மதிப்பிட...

நல்லவை எண்ணியே செய்கின்ற மனிதனை
நானிலம் போற்றி நிற்கும்
அல்லவை செய்பவர் யாரெனு மாயினும்
அகிலமே வெறுத்தொ துக்கும்


வஞ்சகம் குடிகொண்ட நெஞ்சுடைய செல்வரை
வாழ்விலே கண்ட துண்டு.
வற்றாத நதிபோல வாயூறு பொய்யினில்
வளர்கின்ற பேரு முண்டு.
எஞ்சாது கல்விபல கற்றிருந்த போதிலும்
அவர்மனித ராவ தில்லை.
ஏமாற்றி வாழ்கின்ற எத்தர்கள் பூமியில்
என்றுமே உயர்ந்த தில்லை.

வஞ்சக நெஞ்சரை வாயூறு பொய்யரை
வளநிலை காட்ட வில்லை.
வாய்த்ததொரு கல்வியும் மனிதரை யளந்திடும்
வல்லமை பெற்ற தில்லை.
கொஞ்சமும் குறையின்றிக் கொண்டாடு வகைபெற்ற
குணநலன் என்ப தொன்றே
கண்முனே காண்கின்ற மனிதரை மதிப்பிடும்
கருவியாம் கண்டு கொள்வீர்!

நல்லவை எண்ணியே செய்கின்ற மனிதனை
நானிலம் போற்றி நிற்கும்
அல்லவை செய்பவர் யாரெனு மாயினும்
அகிலமே வெறுத்தொ துக்கும்


மதுரைத் தென்றல். வீதியுலா நான்கு. 2000.

போலிகள்


வாசமலர்ச் செடிகளிலே தேனைத் தேடும்
வண்டுசெயும் ரீங்காரம், மரங்கள் மீது
ஓசையெழப் பறவையினம் பேசும் பேச்சும்,
ஓடைசெயும் சலசலப்பும் தென்ற லாக
வீசுகின்ற மென்காற்றில் மிதந்து காதில்
விழும்படியாய் இயற்கையவள் அருகே வந்து
பேசுகின்ற ரகசியங்கள் நகர வாழ்வின்
பேரிழப்பு இவையெதுவும் கிட்டா திங்கு!

அரைச்சுவரில் பசுமையுடன் புற்ப ரப்பு,
அழகான தென்னைமரம், ஆட்டுக் குட்டி,
விரைந்தோடும் நீரோடை, மேசை மீது
விரிப்பினிலே பூச்செடிகள், ஜன்னல் மூடும்
திரைத்துணியில் வான் நிலவு பறவைக் கூட்டம்
திகட்டாத இயற்கைதரும் காட்சி யின்பம்
வரைந்தவெறும் போலிகளில் மட்டும் கண்டு
வாழுகின்ற வாழ்க்கையிது நரகந் தானே!

கலைச்சுரங்கம் ஜனவரி 1997

Saturday, May 02, 2009

கடல் அலையே!


காலை இரவெனப் பாராது - இங்கு
கரைவரை வந்துபின் செல்லுகிறாய்
நீலநி றப்பெருங் கடலலையே!
நீயதன் காரணம் கூறுவையோ?

ஆழ்கடல் எல்லையைக் காத்திடலோ? - அன்றி
அடுத்த நிலந்தனில் முற்றுகையோ?
பாழ்நில மாந்தரைப் போல் முழங்கிப் - போர்ப்
பகைவெறி வுண்டெனக் காட்டுதியோ?

பாலர்கள் காலடி மண்நழுவ - அவர்
பாதம் நனைத்துநீ செல்லுகையில்
கோலமு கங்களில் நகைமலரும் - அந்தக்
கொள்ளை அழகினைக் காண்பதற்கோ?

ஆழ்கடற் செல்வங்கள் அத்தனையும் - வாரி
அள்ளிச் சென்றபெரும் பாதகரை
சூழ்கரை எங்கணும் தேடுதியோ? - நீ
சொல்லிடு வாயிங்கு சற்றுநின்றே!


மதுரைத் தென்றல் வீதியுலா:எட்டு. ஜூன் 2000

Tuesday, March 24, 2009

குறள் நெறிகள்

குத்தி வெட்டியும் குடைந்து தோண்டியும் குதறி மேனியில் குழிகள் செய்திடும் பித்த மானிடர் நிற்கை தாங்கிடும் பெற்றி கொண்டதிப் பூமியல்லவோ? புத்தி யின்றியே புல்லர் தருமிடர் பொறுமை கொண்டுநாம் புறக்க ணிப்பதை ஒத்த நன்னெறி ஒன்று வேறிலை உயர் குறளுரை உணர வேண்டுமே! தெருவி லெச்சிலைத் தேடி யோடியே தின்று வாழ்ந்திடும் நாயினும் நம் அறிவு நன்றியிற் குறைவு தானெனில் அதனை யேற்கவே வேண்டு மல்லவோ? வுருவி லழக்கெமக் குள்ள தென்பதால் வுய்வு வேண்டுத லில்லை யென்பமோ? பரிவு கொண்டதால் வள்ளுவன் இதைப் பாருளோர்க் கெலாம் பகர்ந்து போயினான். என்ன பயனிதாற் கிடைக்கு மென்றுநாம் எண்ணிச் செய்கிற காரி யங்களில் தன்னை வளர்ப்பதோர் நோக்க மொன்றினால் தாழ்ந்து போனவ ராவ தில்லையோ? மண்ணில் தோன்றிய மரங்க ளொப்பவும் மழை பொழிந்திடு மேக மொப்பவும் உண்ணு நீர்தரு நிலைக ளொப்பவும் உலக மானிடர் வாழ வேண்டுமே! பள்ளம் நோக்கியே பாயு நீரென பற்றினால் மனம் தீய நாடிடும் தள்ள வேண்டிய பொருளனைத் தையும் தான டைந்திடத் துன்பமே தரும். உள்ளம் செல்வழித் தீமை நீக்கியோர் உண்மை நன்மைபால் உய்ப்ப தறிவுதான் வள்ளு வன்குறள் தவிர வேறுநூல் வாழு நெறிகளைக் கூறி மிஞ்சுமோ? 'கவிதை' மாத இதழ் மே 1986

Wednesday, March 18, 2009

விடுதி

நெடுந்தூரம் நடந்ததனால் களைப்பு இடையில்
நிறம்மங்கிக் கிழிந்ததொரு பழைய வேட்டி
ஒடுங்கிவெறும் கூடாகிக் கூனல் கண்டு
ஒடிந்துவிழும் தோற்றத்து முதியோர் ஒருவர்
கடுங்கோடை நாளொன்றில் வீட்டுப் படியில்
கதவருகில் தலைசாய்த்துத் தூங்கக் கண்டேன்.
கடுஞ்சொற்கள் சொல்லுதற்கு மனமில் லாமல்
கருணையினால் வீட்டிற்குள் அழைத்துச் சென்றேன்.

'அன்புடனே அழைக்கின்றாய் யார்வீ டெ'ன்ன
'அழகிய இச்சிறுவீடு எனதே' என்றேன்.
'என்ன?இது உன்வீடா? இல்லை இல்லை
எப்படிநீ சொல்லுகிறாய்' என்று கேட்டார்.
'அன்புடனே அழைத்துமக்கு இடமுந் தந்த
அறிவிலியைக் கேட்டதுநீர் சரிதா' னென்றேன்.
'முன்கோபம் கூடாது மனித னுக்கு
முழுதுமிதைக் கேளெ'ன்று மேலும் சொன்னார்.

'தந்தையிதில் சிலகாலம் இருந்த போது
தாயுமிங்கு அவருடனே இருந்த துண்டே!
தந்தைக்குப் பின் நீயுன் மணையா ளோடு
தற்போது வாழ்கின்றாய் அம்மட் டேகாண்.
உன்றனுக்கு பின்னுமிங்கு வசிப்ப தற்கு
உன்மகனும் உளனென்று அறிவா யன்றோ?
வந்திருந்து சிலகாலந் தங்கிப் போக
வாய்த்தவொரு விடுதியிது உன்வீ டாமோ'?

சொற்களவை செவிகளிலே புகுந்து மூளை
சேர்ந்துபொருள் எனக்கங்கு புரிந்த போது
நிற்பதற்கே இயலாதார் எப்ப டித்தான்
நெடுந்தூரம் சென்றாரோ? மறைந்தி ருந்தார்.
'பற்றறுக்க வேண்டியதோர் பாடந் தன்னைப்
பக்குவமாய் வந்தெனக்குச் சொல்லித் தந்த
வற்றலுடல் தாடிமுகச் சித்தர் யாரோ?
வாழ்நாளில் இனியவரை மறக்கல் ஆமோ?

Monday, January 26, 2009

வாழ்க்கை ஒரு விளையாட்டு

பாரிதனைப் படைத்ததுநற் பரம்பொருளின் விளையாட்டு
காரிருளும் நண்பகலும் கடுங்கோடை வசந்தமெலாம்
காலத்தின் விளையாட்டு. கருவுயிர்த்துப் பிறந்திட்டால்
ஞாலத்தில் வாழ்வதுமோர் நலமிக்க விளையாட்டே.

தாலாட்டு விளையாட்டு; தவழ்ந்திடுதல் விளையாட்டு;
பாலூட்டல் மாறியபின் பலபொம்மை விளையாட்டு;
சிற்றில் இழைத்திடுதல்; சிறுதே ருருட்டிவரல்;
பெற்றோர் மகிழ்ந்திடவே பேரோசைப் பறைகொட்டல்

எல்லாம் விளையாட்டு. ஏடெடுத்துக் கற்கையிலே
கல்வியொரு விளையாட்டு; காளையென வளருகையில்
காதலுமே விளையாட்டு; காரிகையைக் கைப்பிடிக்கச்
சோதனைகள் வென்றிடுதல் சோர்வில்லா விளையாட்டு.

தானொன்று தாயென்றும் தந்தைநான் எனவொன்றாய்ச்
சேயிரண்டின் விளையாட்டைச் சேருவது இல்வாழ்க்கை.
மித்திரராய், சத்துருவாய், மேலும்பல வேடமிட்டு,
இத்தரையில் நாடகங்கள் எத்தனையோ ஆடியபின்

வெற்றியிலே தோற்றுப் பிறர்வேதனையில் மகிழ்வுற்றுக்
கற்றதென ஒன்றின்றிக் காலத்தால் வுடல் தளர,
முடிக்கின்ற ஆட்டத்தே முதல்வனவன் விதித்தவழி
மடிதலென்றால் களைப்பாறல் மறுபடியும் ஆடிடவே!

(விளையாட்டுக் களஞ்சியம். மே 1983)