Monday, January 26, 2009

வாழ்க்கை ஒரு விளையாட்டு

பாரிதனைப் படைத்ததுநற் பரம்பொருளின் விளையாட்டு
காரிருளும் நண்பகலும் கடுங்கோடை வசந்தமெலாம்
காலத்தின் விளையாட்டு. கருவுயிர்த்துப் பிறந்திட்டால்
ஞாலத்தில் வாழ்வதுமோர் நலமிக்க விளையாட்டே.

தாலாட்டு விளையாட்டு; தவழ்ந்திடுதல் விளையாட்டு;
பாலூட்டல் மாறியபின் பலபொம்மை விளையாட்டு;
சிற்றில் இழைத்திடுதல்; சிறுதே ருருட்டிவரல்;
பெற்றோர் மகிழ்ந்திடவே பேரோசைப் பறைகொட்டல்

எல்லாம் விளையாட்டு. ஏடெடுத்துக் கற்கையிலே
கல்வியொரு விளையாட்டு; காளையென வளருகையில்
காதலுமே விளையாட்டு; காரிகையைக் கைப்பிடிக்கச்
சோதனைகள் வென்றிடுதல் சோர்வில்லா விளையாட்டு.

தானொன்று தாயென்றும் தந்தைநான் எனவொன்றாய்ச்
சேயிரண்டின் விளையாட்டைச் சேருவது இல்வாழ்க்கை.
மித்திரராய், சத்துருவாய், மேலும்பல வேடமிட்டு,
இத்தரையில் நாடகங்கள் எத்தனையோ ஆடியபின்

வெற்றியிலே தோற்றுப் பிறர்வேதனையில் மகிழ்வுற்றுக்
கற்றதென ஒன்றின்றிக் காலத்தால் வுடல் தளர,
முடிக்கின்ற ஆட்டத்தே முதல்வனவன் விதித்தவழி
மடிதலென்றால் களைப்பாறல் மறுபடியும் ஆடிடவே!

(விளையாட்டுக் களஞ்சியம். மே 1983)

No comments: