Sunday, May 03, 2009

மனிதரை மதிப்பிட...

நல்லவை எண்ணியே செய்கின்ற மனிதனை
நானிலம் போற்றி நிற்கும்
அல்லவை செய்பவர் யாரெனு மாயினும்
அகிலமே வெறுத்தொ துக்கும்


வஞ்சகம் குடிகொண்ட நெஞ்சுடைய செல்வரை
வாழ்விலே கண்ட துண்டு.
வற்றாத நதிபோல வாயூறு பொய்யினில்
வளர்கின்ற பேரு முண்டு.
எஞ்சாது கல்விபல கற்றிருந்த போதிலும்
அவர்மனித ராவ தில்லை.
ஏமாற்றி வாழ்கின்ற எத்தர்கள் பூமியில்
என்றுமே உயர்ந்த தில்லை.

வஞ்சக நெஞ்சரை வாயூறு பொய்யரை
வளநிலை காட்ட வில்லை.
வாய்த்ததொரு கல்வியும் மனிதரை யளந்திடும்
வல்லமை பெற்ற தில்லை.
கொஞ்சமும் குறையின்றிக் கொண்டாடு வகைபெற்ற
குணநலன் என்ப தொன்றே
கண்முனே காண்கின்ற மனிதரை மதிப்பிடும்
கருவியாம் கண்டு கொள்வீர்!

நல்லவை எண்ணியே செய்கின்ற மனிதனை
நானிலம் போற்றி நிற்கும்
அல்லவை செய்பவர் யாரெனு மாயினும்
அகிலமே வெறுத்தொ துக்கும்


மதுரைத் தென்றல். வீதியுலா நான்கு. 2000.

No comments: