Wednesday, September 09, 2009

பாரதி இன்று வந்தால்


(பாரதியாக மாறிப் பாடியது)



ஒளிரு கின்ற தீபமாக உயர்ந்து பார்க்க எண்ணினேன்
இளைய பார தத்தினாய் எங்கு சென்று வீழ்கிறாய்?
விளையு மென்று நாற்றுவிட்டு நட்டு வைத்த பயிரெலாம்
களைக ளாக முட்களாகக் காண நெஞ்சு நோகுதே!

திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானமெய்தி வாழ்வ மென்று பாடினேன்.
திறமை யென்று ஏதுமில்லை தீமை யொன்றே காண்கிறேன்.
தேர்ந்த கல்வி ஞானமொன்றும் தேவை யில்லை என்கிறீர்!

சாதி சமய மென்றுநீங்கள் சண்டை வேண்டி நிற்பதேன்?
மோதல் தேடி அலைவதிங்கு மொத்த மக்கள் நோக்கமோ?
ஆதி வேதம் காட்டுகின்ற அன்பு என்று நீங்குமோ
நாதி யற்றுப் போகுமன்று நாடு கண்டு நோகுவீர்!

வங்க நீரின் மிகையினால் வறண்ட மைய மண்ணெலாம்
பொங்கு வளமை கான்பதென் போன ஜன்மக் கனவுதான்.
இங்கு நதிகள் இணைவது என்று நிகழ்வ தாகுமோ?
எங்க ளிளைய ராற்றலால் எய்த லரிது மாவதோ?

ஏழ்மை தாழ்மைப் பேயெலாம் எளிதிற் தீய்ந்து மாயவும்,
ஊழ லற்ற ஆட்சிதன்னில் ஊரும் நாடு முயரவும்,
ஆழ்ந்த ஞான மெய்திமக்கள் அன்பு கொண்டு வாழவும்,
தாழ்ந்து பாதம் வேண்டினேன். தருவ தாக நீயருள்.
.....ஓம் சக்தி!......


நம் உரத்த சிந்தனை. செப்.2006

No comments: