Saturday, May 02, 2009

கடல் அலையே!


காலை இரவெனப் பாராது - இங்கு
கரைவரை வந்துபின் செல்லுகிறாய்
நீலநி றப்பெருங் கடலலையே!
நீயதன் காரணம் கூறுவையோ?

ஆழ்கடல் எல்லையைக் காத்திடலோ? - அன்றி
அடுத்த நிலந்தனில் முற்றுகையோ?
பாழ்நில மாந்தரைப் போல் முழங்கிப் - போர்ப்
பகைவெறி வுண்டெனக் காட்டுதியோ?

பாலர்கள் காலடி மண்நழுவ - அவர்
பாதம் நனைத்துநீ செல்லுகையில்
கோலமு கங்களில் நகைமலரும் - அந்தக்
கொள்ளை அழகினைக் காண்பதற்கோ?

ஆழ்கடற் செல்வங்கள் அத்தனையும் - வாரி
அள்ளிச் சென்றபெரும் பாதகரை
சூழ்கரை எங்கணும் தேடுதியோ? - நீ
சொல்லிடு வாயிங்கு சற்றுநின்றே!


மதுரைத் தென்றல் வீதியுலா:எட்டு. ஜூன் 2000

No comments: