Monday, June 22, 2009

இந்து மதத்தில் வேற்றுமையில் ஒற்றுமை


ஆயிர மாயிர மாண்டு களாய் - இங்கு
ஆதி மதமென வேர்ப ரந்து
பாயு நதிக்கரைப் பர்வத மீதிலும்
பள்ளம் சமவெளிப் பகுதி யெலாம்

ஆயிர மாயிர விழுதி றக்கி - ஓர்
ஆல மரமெனத் தழைத்தி ருந்து
காயும் பிறமத வெம்மை தடுத்திட
காலம் விரித்தநி ழற்கு டையே!

சாம யசுரென ருக்கெ னவும்- இன்னும்
சாற்று மதர்வண வேத மென்றும்
ஓமம் வளர்த்தலும் மந்தி ரங்கள்
ஓதி நிதம்செயும் பூசை களும்

நாமவை ஏற்றநற் கொள்கை வழிதனில்
நாலென வைந்தென வாகி டினும்
பூமியில் வாழ்கிற மக்க ளுக்கு - ஒரு
புண்ணிய நற்கதி நல்கி டுமே!

கோவில் குளமெனக் கட்டி வைத்து, - பல
கும்பிடு தெய்வங்கள் ஆக்கி வைத்து
ஓயும் வழியில்லா மன்த்த டக்கி- அங்கு
ஒன்றி இறைநிலைப் பேரொ ளியில்

தோயும் வகையினில் செய்ப யிற்சி - அதில்
துன்ப மொழித்திடும் நோக்க மொன்றே!
பாயு நதிகளோ வெவ்வே றவையிப்
பாரினில் சேரிடம் ஓர்க டலே!

பார்க்கு மிருவிழித் தோற்ற மெலாம் - பிழை
பாரி லிருக்கிற பொருள ணைத்தும்
கூர்த்த மதியுடைக் கொள்கையிற் சீரியர்
கூறிய தத்துவப் ப்ரம்ம மன்றோ?

சாற்றிய ப்ரம்மமும் உணர்ந்த வர்க்கு
சட்டென மாயையை நீக்கி டுமே!
வேற்றுமை தன்னிடைத் தோற்றி டினும்- பொருள்
வேறல்ல ஒன்றெனக் காட்டி டுமே!

வேதம் முதலுள மீமாம்ச சாத்திரம்
வேறுள வாகம நூல்க ளெலாம்
பேதங் களைப்பல பேசி டினும்- பெரும்
பேறென நாமவை பெற்ற செல்வம்.

மத்ஸ்யம் முதலிய பத்தவ தாரமும்
மாதவன் செய்த வையே.- அவன்
தத்துவ கீதையில் தர்ம நெறிமுறை
யுத்த களந்தனில் தந்த வனே!


காஞ்சீபுரம் இந்து தமிழ்க் கவிஞர் மன்றத்தின் நவராத்திரி கவிக்கோவைப் போட்டியில் பரிசு பெற்றது. (அக். 1982)

No comments: