Tuesday, March 24, 2009

குறள் நெறிகள்

குத்தி வெட்டியும் குடைந்து தோண்டியும் குதறி மேனியில் குழிகள் செய்திடும் பித்த மானிடர் நிற்கை தாங்கிடும் பெற்றி கொண்டதிப் பூமியல்லவோ? புத்தி யின்றியே புல்லர் தருமிடர் பொறுமை கொண்டுநாம் புறக்க ணிப்பதை ஒத்த நன்னெறி ஒன்று வேறிலை உயர் குறளுரை உணர வேண்டுமே! தெருவி லெச்சிலைத் தேடி யோடியே தின்று வாழ்ந்திடும் நாயினும் நம் அறிவு நன்றியிற் குறைவு தானெனில் அதனை யேற்கவே வேண்டு மல்லவோ? வுருவி லழக்கெமக் குள்ள தென்பதால் வுய்வு வேண்டுத லில்லை யென்பமோ? பரிவு கொண்டதால் வள்ளுவன் இதைப் பாருளோர்க் கெலாம் பகர்ந்து போயினான். என்ன பயனிதாற் கிடைக்கு மென்றுநாம் எண்ணிச் செய்கிற காரி யங்களில் தன்னை வளர்ப்பதோர் நோக்க மொன்றினால் தாழ்ந்து போனவ ராவ தில்லையோ? மண்ணில் தோன்றிய மரங்க ளொப்பவும் மழை பொழிந்திடு மேக மொப்பவும் உண்ணு நீர்தரு நிலைக ளொப்பவும் உலக மானிடர் வாழ வேண்டுமே! பள்ளம் நோக்கியே பாயு நீரென பற்றினால் மனம் தீய நாடிடும் தள்ள வேண்டிய பொருளனைத் தையும் தான டைந்திடத் துன்பமே தரும். உள்ளம் செல்வழித் தீமை நீக்கியோர் உண்மை நன்மைபால் உய்ப்ப தறிவுதான் வள்ளு வன்குறள் தவிர வேறுநூல் வாழு நெறிகளைக் கூறி மிஞ்சுமோ? 'கவிதை' மாத இதழ் மே 1986

No comments: