Sunday, May 03, 2009

போலிகள்


வாசமலர்ச் செடிகளிலே தேனைத் தேடும்
வண்டுசெயும் ரீங்காரம், மரங்கள் மீது
ஓசையெழப் பறவையினம் பேசும் பேச்சும்,
ஓடைசெயும் சலசலப்பும் தென்ற லாக
வீசுகின்ற மென்காற்றில் மிதந்து காதில்
விழும்படியாய் இயற்கையவள் அருகே வந்து
பேசுகின்ற ரகசியங்கள் நகர வாழ்வின்
பேரிழப்பு இவையெதுவும் கிட்டா திங்கு!

அரைச்சுவரில் பசுமையுடன் புற்ப ரப்பு,
அழகான தென்னைமரம், ஆட்டுக் குட்டி,
விரைந்தோடும் நீரோடை, மேசை மீது
விரிப்பினிலே பூச்செடிகள், ஜன்னல் மூடும்
திரைத்துணியில் வான் நிலவு பறவைக் கூட்டம்
திகட்டாத இயற்கைதரும் காட்சி யின்பம்
வரைந்தவெறும் போலிகளில் மட்டும் கண்டு
வாழுகின்ற வாழ்க்கையிது நரகந் தானே!

கலைச்சுரங்கம் ஜனவரி 1997

No comments: