மெலிதாக முன்பிருந்த முட்டைக் கருவே
வலிய முதலையென வாகும். - நிலையாய்
இதுசிறிதென் றெண்ணா திடர்விளைக்கு மொன்றை
அதுவளரும் முன்னர் அகற்று.
(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)
மெலிதாக முன்பிருந்த முட்டைக் கருவே
வலிய முதலையென வாகும். - நிலையாய்
இதுசிறிதென் றெண்ணா திடர்விளைக்கு மொன்றை
அதுவளரும் முன்னர் அகற்று.
(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)
நாளையென் றொன்றில்லை நேற்றுக் கவலையுடன்
நாளையென்ற தின்றைய நாளைத்தான். - நாளையெனில்
இன்னொருநாள் வேறென்ன? எண்ணியவை நல்லபடி
முன்னரே செய்ய முயல்.
உண்டுபயன் என்றே உறுதியாய் நம்பாது
கொண்டதொரு சந்தேகம் கூடியதோ? – கொண்டு
வடித்தபா ஈறாக வாய்த்ததிதே உண்மை
படிப்பதால் உண்டு பயன்.
ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com
15.4.2019
கல்விக் கொடையும் கலைவளர்ச்சிக் காதரவும்
நல்கு தமிழ்வழங்கு நாவலரைச்
--- சொல்லற்குச்
சொல்லிலையே. எப்போதும் சோர்வறியா
தேயுழைக்கும்
நல்லிபுகழ் நாடறியும் நன்கு.
முன்னேறக் கற்போர் முயன்று படிப்பதற்குத்
தன்னே ரிலாத தனிநூலாய்
--- மண்ணிலுளோர்
தாழ்வின்றி வென்றுயரத் தான்வாழ்ந்து காட்டுகிறார்
வாழ்வு நடத்தும் வழி
பட்டுக் கிவரென்று பார்போற்ற நின்றாரை
எட்டியெடை போடல் இயலாதே.
--- பட்டறிவால்
இட்ட பெயரறியா எல்லோர்க்கும் “நல்லி’யாய்க்
கிட்ட இருக்கின்றார் காண்.
பட்டறிவு = அனுபவத்தால் ஏற்பட்டதும், பட்டு பற்றியதுமான அறிவு.
அன்புப் பாலம் நவம்பர் 2024
நல்லி சிறப்பிதழில் வெளியானது.
ஓயா துழைத்தலும்
உயர்பொரு ளீட்டலும்
தேயா துளபுகழ்
தேடலு மின்றி
வேயா மாட
விரிவெளி போலுள
வாயாற்
பேசி வாழ்பொழு தழிப்பார்
--- வேறு
சுதந்திரம் வேண்டிய தில்லை
இதமுடன்
பேசல் இறங்கி அடங்கலாம்
அதிரப்
பேசலே ஆண்மையென் றிருப்பார்
எதையும்
பேச அவர்க்குள உரிமையில்
எதுவும்
தடைவரில் ஏற்றிட மறுப்பார்
--- வேறு
சுதந்திரம் வேண்டிய தில்லை
கசையா
லடித்துக் காயப் படுத்தலாய்
வசைகள்
மொழிந்து வாயாற் கிழிக்கும்
இசையா
தோரை இழித்துப் பேசுமந்
நசைக்குத்
தீனி நல்கு சுதந்திரம்.
--- வேறு
சுதந்திரம் வேண்டிய தில்லை
பின்னற் றலைப்பூவும்
பட்டுச்சிற் றாடையினிற்
கண்ணைக் கவர்மலர்கள்
காண்பவையும் – மின்னலெனத்
தாவிவிளை யாடத்
தரைவந்த தேவதையிப்
பூவின்மேல் எத்தனை
பூ
ஈற்றடிக்கு
எழுதியது. Tamilauthors.com
முன்னரே எண்ணி முடிக்கும் வழியறிந்து
பின்னர் பெறுபயனும் பார்த்திடுவாய் – இன்னும்
முனைந்து நெறிகளுக்குள் முற்றவும் நின்றே
வினைசெய்ய நாளும் விரும்பு.
ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Aug.2020
பொருளொடு பண்பும் போதையி லழிய
வருதுயர் மீண்டு வரும்வழி யறியா
மனிதரை மயக்கி மதியினை யழித்து
இனியிவர் பயனில ரெனும்படி யாக்கும்
அதுதரு துயரம் அளவிடற் கரியது.
மதுவெனு மரக்கனை மடித்திட வேண்டும்.
பிறப்பி னடியிற் பிரிவுக ளோதி
அறம்பிறழ் செய்கை அளவில தாகப்
பிறர்பகை வளர்க்கும் பேதமை வெல்லத்
திறம்பட முயன்றத் தீமையொ டின்னும்,
மேசைக் கடியில் கைகளை நீட்டி
ஓசையி லாதே உளபொருள் கொள்ளும்
பரவும் லஞ்சப் பழம்பே யுட்பட,
நரகினி லாழ்த்தும் நம்மிடர் விலக,
உரமுள நெஞ்சுட னுறுதியாய்
நரகா சுரர்களை நைப்போம் நாமே.
புதுச்சேரி, ஓசோன் பூம்பொழில் இலக்கிய அமைப்பு நடத்திய, ஆசிரியப்பாப்
போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. 4.12.2022.