Monday, September 27, 2021

செய்வர் செயற்பா லவை

 

ஆற்றினி லோடுநீ ரற்றுலர்ந்த போதிலும்

ஊற்றுநீர் ஆறுதவ லுண்டன்றோ? – போற்றுவகை

எய்துபொரு ளற்றபினு மெஞ்சியதில் நற்குணத்தார்

செய்வர் செயற்பா லவை.


ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com மின்னிதழ் ஜுலை 2019

Saturday, September 11, 2021

எண்ணும் பெருமை இவை

 


    அருமை யுடையசெயல் ஆற்றல்பொய் யாமை

    பெருமைத் தருக்கில்லாப் பேச்சு – பொருமையுடன்

    தன்னில் எளியோரைத் தாங்கு மருங்குணம்

    எண்ணும் பெருமை இவை.


    ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com 1.6.2019



Thursday, July 22, 2021

எப்படியும் ஆகத்தானே போகிறது?

எட்டரை யாகப் போகிற தெழுவெனத்
 தட்டி யெழுப்பிய தம்பிசொற் கேட்டு, 
உதறிப் போர்வை உடனே விலக்கிப் 
பதறி யெழுந்து பார்த்தனள் மணியை.
 அக்கா:
 “ ஆறே இன்னும் ஆகவே இலையே, 
தீராப் புளுகன், திருட்டுக் கழுதை” 
 தம்பி: 
”இதற்குப் போய்ஏன் இத்தனை கோபம்?
 இதுநீ கேள்நான் இயம்பிய துண்மை. 
ஆகத் தானே போகிற தென்றேன்? 
ஆகும் நிச்சயம். அறிவாய் நீயே!”

Tuesday, July 20, 2021

எனக்கு அது உண்டு

இருவர் நடப்ப தெளிதிலை யான 
ஒருவர் நடக்க உளவழி தன்னில் 
முதியவ ரொருவர் நடந்திடு போதில் 
புதியவ னொருவ னெதிரினில் வந்து 
பரிவொடு வழிவிடு பன்பில னாக 
அறிவிலி எவர்க்கும் வழிவிடு பழக்கம் 
தனக்கிலை யென்று தருக்கினி லுரைக்க 
எனக்கது உண்டென ஒருபுறம் விலகி 
முன்செல விட்டு மிண்டும் 
தன்வழி தொடர்ந்து தான் நடந்தாரே!

Sunday, June 20, 2021

திருஉறை மார்ப!

 


பொருளே பெரிதாய்ப் புரிபா வமுடன்

   புலனின் பநுகர் வதிலார் வமுளன்

அருளிச் செயலை வடவே தமதை

   அறவே அறியா துளகீழ் நிலையன்

 

மனதா லுரையா லுளதே கமதால்

   மதிமீ றியகா ரியமே புரியும்

எனதா யிரமா யிரமா னபிழை

   எதுவா யினுமே இலையா யருள்வாய்

 

ஒருசக் கரமும் ஒலிசங் கதுவும்

   உடையாய்! அழகே உருவா னவனே!

திருவே தனதாய் உறைமார் பினனே!

   தொழுதேன் அடிசேர் கதிதந் தருளே!

Friday, April 30, 2021

நிழலும் மிதிக்கும் நிலை

 

உன்னதம் போய்மறையும் உற்றதுணை விட்டகலும்

பின்னடைவு கண்டு பிறர்நகைப்பர் – எண்ணி

அழலே விதியென் றடங்கவும் வைக்கும்

நிழலும் மிதிக்கும் நிலை.


ஈற்றடிக்கு எழுதியது.    Tamilauthors.com. Minnithazh 20.5.2019

Tuesday, April 20, 2021

எங்கும் நிறைந்தவன் தான்! (வினாவிடை)

 


 

வண்ணக் கலவையில் தூரிகை தோய்த்திதை

    வானில் வரைந்தவர் யார்?

மண்ணி லதன்நிழல் நீரில் விழும்படி

    மாண்புறச் செய்தது யார்?

 

\கண்ணைக் கவர்கிற காட்சிகள் யாவிலும்

    காணென நிற்பவன் தான்.

எண்ணத் துறைபவன் எழில்வடி வானவன்

    எங்கும் நிறைந்தவன் தான்.

 

 

மின்னிதழ் ஒன்றின் படக்கவிதைப் போட்டிக்காக எழுதியது.

10.9.2018.

Thursday, April 01, 2021

எக்காலத் தானும் இனிது



பொய்யாயாள் சேர்த்தல், பொருள்தருதல், சாவடிக்குள்
கையாள் எனவிவற்றால் காண்வெற்றி – மெய்யாமோ?
தக்கார் எனமக்கள் தாமே தரும்வெற்றி
எக்காலத் தானும் இனிது.

ஈற்றடிக்கு எழுதியது. tamil authors.com 25.3.2019

 

Sunday, January 24, 2021

துன்புற்று வாழ்தல் அரிது

 

 

காட்டிப் பொருமையினைக் காரியங்கள் ஆற்றிடுவார்

போட்டி தவிர்த்துப் பொருள்சேர்ப்பார். – ஈட்டியதில்

இன்புற் றிரப்போர்க்கும் ஈந்துவப்பார் பாரிலவர்

துன்புற்று வாழ்தல் அரிது.


ஈற்றடிக்கு எழுதியது. Tamiauthors.com Minnithazh 18.3.2019

Sunday, January 17, 2021

கைநிறையக் காசிருந்தக் கால்

 

கண்டபடி கண்மேயும். காதிரண்டும் கேட்காது.

மண்டுதலைக் கர்வம் மதியழிக்கும். – உண்டாகும்

பொய்யுறவும் நட்பும் பொழுதழிக்கும். கீழோரின்

கைநிறையக் காசிருந்தக் கால்.


ஈற்றடிக்கு எழுதியது. Tamil authors.com. Minnithazh 8.5.2019

Monday, December 28, 2020

புலியென்றும் தின்னுமோ புல்

 


வலிந்துசெயல் கொள்ள வழங்குகிற லஞ்சம்

நலிந்திருந்தும் நாடாதார் நல்லோர் – மலிந்து

கலிநின்றே ஆடுமிக் காலத்தும் உண்டு.

புலியென்றும் தின்னுமோ புல்?


ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com  29.4.2019

Sunday, December 27, 2020

புகழென்னும் போதைப் பொருள்

 


தலைக்கர்வம் ஏற்றும். தகவற்றார் தாமே

விலைக்குப் பெறுவிருதை வேண்டும். – அலைதல்

இகழ்வென்றும் எண்ணா திரக்கவும் தூண்டும்.

புகழென்னும் போதைப் பொருள்.


ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com. Minnithazh.   22.4.2019

Monday, December 14, 2020

கல்வி யழகே அழகு.

 

கற்றவரிற் பொய்யர் கயவரொடு வீணரிவர்

பெற்றபொருட் பேரழகைப் பேசுவதோ? – கற்றதெது?

நல்ல நெறியறிந்து நிற்கை பிறழாதார்

கல்வி யழகே அழகு.

 

ஈற்றடிக்கு எழுதியது Tamilauthors.com Minnithazh  8.4.2019

Friday, December 04, 2020

மானம் அழுங்க வரின்

 

 

மானம் வருமானம் மண்ணில் இவையிரண்டில்

மானம் பெரிதாய் மதித்திடுவார் – மேனிலையர்

காணப் பலகோடி கைவரினும் வேண்டார்தம்

மானம் அழுங்க வரின்.


ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithaz  1.4.2019

 

Tuesday, November 10, 2020

அறவழியிலேயே அடைக

 


 

பிறர்போலப் பேரும்

பெருந்தனமும் வேண்டின்

அறவழியில் நின்றே அடைக.

 – பிறழாது

போனவழி நேர்மை

புகழ்சேர்க்கும் அவ்வழியே

ஆனவரை செல்வ தறிவு.

Wednesday, October 21, 2020

இழந்தார் எனப்படுதல் இல்

 

 

உள்ள இடமெரிய ஓரிரவில் கையூட்டுக்

கள்ளப் பணங்கருகும் கண்முன்னே. – தள்ளி

இழந்ததனைத் தாமென்றும் ஊரார்க் குரையார்

இழந்தா ரெனப்படுதல் இல்.


 ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithazh 11.3.2019

Sunday, October 18, 2020

மான முடையார் மதிப்பு

 


மான அவமானம் மற்றுமுள்ள நன்னெறிகள்

பேணல் மடமையெனப் பேசுகிறார். – காணுகிற

ஈன நிலையதனில் எங்ஙனமே பெற்றிடுவார்

மான முடையார் மதிப்பு?


ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithaz  4.3.2019

Tuesday, September 29, 2020

புற்பனி பற்றுவிட் டாங்கு

 

  

 

பெற்றதெனச் செல்வம் பெரிதளவிற் கொண்டவரைச்

சுற்றமெனத் தாம்வந்து சூழ்ந்திருந்தார் – அற்றபினர்

பற்றில ராய்விடுதற் பாரிற் பரிதியின்முன்

புற்பனி பற்றுவிட் டாங்கு.


ஈற்றடிக்கு எழுதியது.  Tamilauthors.com Minnithaz. 11.2.2019

Friday, September 25, 2020

பாதமூலம் பற்றிலேன்…......

 


 

சங்கல்ப்பம் ஒன்றாலே எதையும் செய்து

    சாதிக்கும் வலிமையுளன் பரமன் என்பர்.

தங்கியவன் கையிருந்து பணிகள் செய்யும்

    திருவாழி தனையேவி னாலே போதும்

பொங்கிவரும் நீர்ச்சுனையில் ஊர்ந்து செல்லும்

    பூச்சியொரு முதலைபெரும் பகையாய் ஆமோ?

எங்கென்றோர் யானைகுரல் கேட்டு வந்த

    எளியவனின் திருப்பாதம் பற்ற வேண்டும்.

 

மெய்தீண்டித் திருமகளைத் துயரில் உய்த்த

    மிகக்கொடிய அபசாரம் கண்டு பொங்கி

எய்ததொரு அத்திரம்பின் துரத்த ஓடி

    எங்கேயும் துணைதனக்கா யானா ரின்றி

எய்தவனைச் சரணமென வந்து வீழ்ந்தே

    ’எனைக்காக்க வேண்டு’மென்ற சயந்தன் அன்று

செய்தபிழை பொறுத்தவனை வாழ வைத்த

    செய்யதிருப் பாதங்கள் பற்ற வேண்டும்.

 

தங்களையே தாம்காத்துக் கொள்ளு கின்ற

    தகவில்லாக் கற்றினங்கள் வாழ வேண்டிப்

பொங்குகின்ற பரிவோடு தானே வந்து

    புரிந்ததொரு ரக்‌ஷணத்தை மனதிற் கொண்டு

தங்கியிள்ள பாற்கடலும் அரவி னணையும்

    திருமகளின் உடனுறைவும் விட்டு நீங்கி

இங்குவந்து கானகத்தில் கன்று மேய்த்த

    எளியதிருப் பாதங்கள் பற்ற வேண்டும்.

   

கங்கையினும் ஒருபடிமேல் புனிதம் கொண்ட

    காவிரிபாய் பொழில்சூழ்ந்த பதிய ரங்கம்.

அங்குதொண்ட ரடிப்பொடியார் களிக்கு மாறே

    அரவணையிற் பள்ளிகொண்ட கிடக்கை காட்டி

“எங்ஙனம்நான் மறந்தினியும் வாழ்வேன்” இங்கே

     எனும்படியாய்த் தன்னழகால் அரங்கன் ஈர்க்க

“எங்கள்மால் இறைவனவன் ஈசன்” என்றே

     ஏற்றவருக் காட்செய்யும் இதயம் கொண்டார். 

 

“போதெல்லாம் போதுதனைக் கொண்டே யுன்றன்

     பொன்னடியிற் புனையுதலைச் செய்த தில்லை.

தீதில்லா தொழிமொழியில் தினமு முன்றன்

     திருக்குணங்கள் செப்புதலைச் செய்த தில்லை.

காதலினாற் பெருகுமன்பு காணா நெஞ்சிற்

     கடியனாகி நிற்கின்றேன் ஆத லாலே

ஏதிலன்நான் ஏன்பிறந்தேன்? இருக்கின் றேனே!”

     என்றவர்தன் தாழ்நிலையைச் சிந்திக் கின்றார்.

 

திருமாலுக் குகந்ததிருத் தலம்பி றக்கும்

     திருவெனக்கே அமையவிலை. அத்த லத்தில்

ஒருகாணி கைங்கர்ய நிலமுண் டாயின்

     உயர்பணிக்காய் அங்கேகும் நன்மை யுண்டு.

ஒருசிலரங் குறவினராய் வாழ்ந்தி ருந்தால்

     உரிமையுடன் அவர்காணச் செல்லக் கூடும்.

ஒருவருமே முகமறிந்தா ரில்லை யாக

     உயர்ந்ததிருத் தலத்தொடர்பே இல்லை என்றும்

 

”கற்றினங்கள் மேய்ப்பதற்காய் நடந்த பாதம்,

     களிறுற்ற இடர்நீக்க வந்த பாதம்,

உற்றவராய்க் காப்பாற்ற ஒருவ ரின்றி

     ஓடிவந்து குற்றவாளி சயந்தன் அன்று

பற்றுகதி இதுவென்றே வீழ்ந்த பாதம்,

     பரமமூர்த்தி உன்பாதந் தன்னை இன்னும்

பற்றிலனே அரங்கா”வென் றரற்றி நின்ற

     பாடல்களின் பொருள்கொஞ்சம் முயன்று சொன்னேன்.

 

தேவகான இன்னிசைச் சங்கம், நன்மங்கலம். 30.12.2018.

Thursday, September 10, 2020

அல்லல் களைவ தறம்

 


 

வறுமையினால் நோயால் வயதின் முதிர்வாற்

பெறுதுயரால் வாடும் பிறர்க்கே – உறுதுணையாய்

இல்லை யெனாதே இயன்றவரை யுதவி

அல்லல் களைவ தறம்

 

ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithazh 4.2.2019