Sunday, January 25, 2009

காலைப் பொழுது

இளம்பரிதி முளைத்தெழவும்
இருளகன்று ஓடிவிடும். - குப்பைச்
சேவலது கூவலோடு
செகத்தினிலே நாள் பிறக்கும்.

வாசலிலே தூசகலும்;
வாளிமழை நீர்பொழியும்; - பெண்கள்
விரல்வழிவெண் பொடிவழிய
வீதியிலே பூமலரும்.

தினத்தாள் பறந்துவரும்;
தெருவோரம் மலம்சேரும். - நடுவீதிப்
பால்வண்டி ஒலிகேட்கப்
பாத்திரங்கள் காத்திருக்கும்.

ஆற்றின் கரைநிறையும்;
அழுக்காடை பாட்டிசைக்கும்; - பலரும்
தலையமிழ்த்தி நீராடத்
தண்ணீரே தாளமிடும்.

இல்லாளின் முனுமுனுப்பின்,
இனியமகன் தேவைகளின் - பின்னே
நாள்முழுதும் செய்வதற்கு
நம்கடமை காத்திருக்கும்.

(ஜன்னல். நவம்பர் 1977.)

No comments: