Sunday, January 25, 2009

முழு நிலவு

அதியுணவு கொண்டதனால் அவதி யுற்று
அன்றொருநாள் மேன்மாடத் தமர்ந்தி ருந்தேன்.
அதிகாலை செய்வதற்கு வேலை யுண்டு
அசதியினில் வுடல்சாய்த்தேன் உறக்கம் கொள்ள.
அதியழகி மதியரசி ஆடு கின்ற
அரங்கமென விண்வெளியை ஆக்கி வைத்து,
பதியிதனைப் பார்க்கிறவர் கூட மாக்கிப்
பார்த்திட்டேன் மனத்திரையில் நாட்டியத்தை.

ஆடிநின்ற அவள்தலையில் அணிந்திருந்த
அழகான மல்லிகைப்பூச் சரமும் ஆடி
மேடையிலே விரித்துவைத்த நீலப் பட்டில்
மின்னுகின்ற வெண்பூக்கள் வுதிர்த்த காட்சி
ஒடுகின்ற நதிநீரில் துரும்பு போல
ஒருநொடியில் மறைந்துவிடும் காட்சியாகி,
கோடிக்கைச் சூரியனால் கலைந்து போக
கோபத்தில் விழித்தபோது காலை நேரம்.

மண்ணரங்கில் நாட்டியங்கள் முடிந்த பின்பு
மனிவிளக்குத் தோரணங்கள் யாவும் நீங்கி
எண்ணிறந்த இனியகாட்சி இல்லை யாகி
ஏளனத்து வெற்றிடமாய் மாறிப் போகும்.
விண்ணரங்கில் மதியரசி ஆட்டம் கூட
விலக்கில்லை இதற்கென்றால் என்ன செய்ய?
கண்ணிரண்டும் திங்களொன்று காத்திருந்து
காட்சியிதை மறுபடியும் காண வேண்டும்.

(அமுதசுரபி. டிசம்பர் 1980)

No comments: