Friday, January 23, 2009

எங்கள் கிராமம்

ஓலையில் வேய்ந்த குடிசையுண்டு நல்ல 
ஓடையுண்டு சிறு சோலையுண்டு - அதி 
காலையிலும் கூடக் காதவழி செல்லக் 
காளைகள் பூட்டிய வண்டியுண்டு. 

 மாட்டிய கழுத்து மணியொலிக்க - 
நல்ல மாடுகள் வண்டியை இழுத்து வர
 ஓட்டி வருகிற சாரதி செய்கிற 
ஓரொரு சீழ்கை ஒலி கேட்கும். 

 வீடுகள் முன்னர் நீர் தெளித்து - நல்ல
 வெள்ளைப் பொடி வைத்துக் கோடிழுத்து
 பாடிய வாயுடன் பற்பல பென்டிர்கள் 
பக்குவமாய் இடும் கோலமுண்டு. 

கூடிய நெற்பயிர் தோள்சு மந்து - அவர் 
கொண்டு வந்து நல்ல பொங்கல் வைத்து 
தேடி வருகிற விருந்தினர் யாவரும் 
தினறும் வகையினில் உண்ண வைப்பார் 

 ஆலயக் கோபுரம் அருகிற் சிறுகுளம் 
அரசம ரத்தடிப் பிள்ளை யாரும் 
 மாலையில் ஓர்முறை யாவது வாவென 
மக்களை யழைக்கும் பூவ னமும் 

 வருகின்ற தென்றலின் இனிமையுடன் - அங்கு 
வளர்கின்ற தென்னையின் இள நீரும் 
தருகின்ற சுவையினிற் கால மெல்லாம் - அங்கு
 தனியாய்க் கழித்திடத் தோன்று மம்மா.

 (முல்லைச்சரம். நவம்பர் 1974)

No comments: