Sunday, January 11, 2026

ப.கே. 65. கவனி இதுவே கணக்கு


 

        இருபக்கம் கர்ணம் இவைமீ தெழுதப்

        பெறுசதுரம் மூன்றில், பரப்பில் --- பெரிது,

        தவறின்றி முன்னிரண்டும் தாம்சேர்ந்த தாகும்.

        கவனி இதுவே கணக்கு.


         ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com  மார்ச். 2022

        ஒரு செங்கோண முக்கோணத்தில், கர்ணத்தின் மீது வரைந்த       சதுரத்தின் பரப்பு, மற்ற இரண்டு பக்கங்களின் மீது வரைந்த     சதுரங்களின் மொத்தப் பரப்புக்குச் சமம். 


 

       

ப.கே. 64. வருங்காலத் திற்கென்று வை

  

      வயதான காலத்தில் வாழுவதற் கீட்டல்

      இயலாத தாவ தியல்பே --- முயன்றே

      அரும்பொருள் வீணாய் அழியாமற் சேர்த்து

      வருங்காலத் திற்கென்று வை.

 

      ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com  ஆக. 2021

ப.கே. 63. வாயாற் சுடுவார் வடை

 

   காசில்லை கையினில் கஞ்சி குடிக்கவழி

   யோசிக்க வேண்டி யிருப்பவர். --- பேசிடிலோ

   பாயாக வான்சுருட்டிப் பைக்குள் திணித்திடுவார்

   வாயாற் சுடுவார் வடை.

 

   ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com  ஜுன் 2021

ப.கே. 62 நெஞ்சகமே கோவில் நினை

  

 

   கஞ்சத்தாள் கேள்வன் கழலிணையைப் பக்தியுடன்

   தஞ்சமெனப் பற்றியவர் தம்முளத்தே – மஞ்சமென

   நஞ்சரவிற் கண்வளரும் நாரணனே வந்துறைவன்

   நெஞ்சகமே கோவில் நினை.

 

    கஞ்சத்தாள்:  தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமி

    ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com …. அக். 2020 

Thursday, October 02, 2025

ப. கே. 61. கம்பன் கவியழகைக் காண்.

 செந்தமிழில் ஏது சிறப்பென்று கேட்பாரேல்

வெந்தழியும் வீணர்நா வேறெதையும் நம்பாதே

செம்பொருள்சேர் வள்ளுவத்தைச் சிந்தா மணிநயத்தைக்

கம்பன் கவியழகைக் காண்.


 

 


ப. கே. 60. எண்ணிக் களிக்கின்றேன் யான்.

 தன்னை வணங்கித் தமிழ்நூல் எழுதுகையில்

அன்னையென நின்றே அருள்புரிவாள் தானொரு

கன்னியெனத் தோற்றம் கவிதைகளிற் காட்டுவதை

எண்ணிக் களிக்கின்றேன் யான்

 



ப. கே. 59. தமிழ்வாழத் தான்வாழ்தல் தான்

 

 

படித்துச் சுவைக்கப் பலப்பலவாய் நூல்கள்

வடித்துப் புகழ்வளர வாழ்தல் --- பிடித்த

தமிழாலே என்றால் தரமாமோ? நன்று

தமிழ்வாழத் தான்வாழ்தல் தான்

ப. கே. 58. கால விரயமே காண்

 


முன்னை இழப்பினின்று மீளாத் துயருறல்

தன்னில் பிறருயர்வைத் தாங்காமை -- நன்னெறிகள்

சீலம் நயவார்க்குச் சொல்லுதல் இம்மூன்றும்

கால விரயமே காண்.

Thursday, June 19, 2025

ப.கே. 57 உடைத்தாராய் யாரிங் குளர்?

 

பொறுமையுடன் நம்பிக்கை போற்றி யிருத்தல்

வருபயனைக் காணும் வழியாம் – ஒருவர்

அடைகாத்த லாற்றாதே ஓடுடைத்துக் குஞ்சை

யுடைத்தாராய் யாரிங் குளர்?


(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)


ப.கே. 56. கனவு நனவாகும் காண்.

 

முயற்சி கவனம் முறையான திட்டம்

அயர்ச்சி யிலாதுழைக்கு மார்வம் – பயிற்சி

தனமுமுள தாயின் தவறாது வெற்றிக்

கனவு நனவாகும் காண்.

ப.கே. 55 உனக்கிருக்கு மென்றே உணர்

 

பொறாமை யகம்பாவம் பேராசை மூன்று

மிராத மனமுடையை ஆயின் – வராது

மனக்கலக்கம் வாழ்வில் மகிழ்வோ டமைதி

உனக்கிருக்கு மென்றே உணர்.


(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)


ப.கே. 54. கல்லறையிலே கிடைக்கும் காண்.

முயன்றால் மனக்குழப்பம் முற்றா தமைதி

இயன்றவரை போராடி எய்தலாம். -  முயற்சியே

எள்ளளவு மின்றி எளிதிலது வேண்டுமெனில்

கல்லறையி லேகிடைக்கும் காண். 


(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)


Saturday, May 24, 2025

மருந்து

                      மருந்தென்றேன் காபி மறக்காதைந் தெம்மல்     

                      அருந்தென்று தந்தாள் அவள்      

                     சந்த வசந்தம் முகநூல் குழுமத்தில் டாக்டர்.

                      ரவீந்திரனின்   காபி வந்தனம்  கவிதைக்குப் 

                     பின்னூட்டமாய்   எழுதியது.    (25.11.2019)

 

                                       

      ம

 

 

Saturday, May 10, 2025

ப.கே 53. புத்தக வாசிப்பே பொன்

 

முத்து பவழம் மரகதமும் பொன்கொண்டு

பத்தி அமையப் பதித்தவைகள்.  --- ஒத்தநகை.

மெத்த அறிவுடைமை மேலாம். அணியதற்குப்

புத்தக வாசிப்பே பொன்.

ஈற்றடிக்கு எழுதியது. இலக்கியச்சோலை ஏப்ரல் 2025 இதழில் வெளியானது.



Saturday, April 26, 2025

நாமம் சொல்ல நியதி இல்லை




ஏதும் நியதியிலை எம்பெருமான் நாமம்நாம்
ஓதும் பொழுதே உயர்தருணம் – பாதையிலே
கல்லிடறிக் காயமுறுங் காலம்மா வென்றொருசொல்
சொல்லச் சடங்குண்டோ சொல்.


நாமம் சொல்ல நியதி இல்லை என்கிற தலைப்பிலான முகநூல் கட்டுரைக்காக 7.4.2020 ல் எழுதியது

ப.கே 52 ஈடில்லை

 


எந்த இறையுருவும் என்மனதில் வந்துறையும்

கந்தனெனச் சொன்ன கவிஞரவர் --- செந்தமிழ்நா

பாடிக் குவிக்கின்ற பக்திப் பனுவற்கே

ஈடிங் கிலையென்பேன் யான்

 

முதுபெருங் கவிஞர் கவிமாமணி புதுவயல் நா.செல்லப்பன் அவர்களுடைய, வயலூர் முருகன் மீதான வெண்பா மாலையைப் படித்து, மகிழ்ந்தெழுதியது 16.1.2019

Wednesday, April 23, 2025

வாழ்க வாழ்க!

 


 

புதுகைத் தென்றல் ஆசிரியர் திரு. மு. தருமராசன் அவர்களின் 80 ஆண்டு நிறைவு வாழ்த்துப்பா.

 

பெருமதிப்பிற் பணம்புழங்கிப்

      பெருகிவளர் வங்கியெனும்

திருமகளின் உறைவிடத்துத்

      தினம்சென்று பணியாற்றி

வருபொருளால் வாழ்வியற்றல்

      வாய்த்திருந்தார்! செந்தமிழ்த்தாய்

அருளுடைமை காண்வகையில்

      ஆற்றொழுக்காய் எழுதவல்லார்!

 

 

பணியிலுளோர் உரிமைக்காய்ப்

       பலதடவை குரல்கொடுத்த

துணிவுடைய தலைவரெனத்

       துலங்கியவர். பண்புமிக்கார்.

இணைபிரியாத் துணைவியொடு

       இருவருமாய் மனமுவந்து

அணுகுபவற் குதவிசெயும்

        அருமையான தம்பதியர்.

 

 

எதுவரையிற் கதிருளதோ

        எதுவரையில் மதியுளதோ

அதுவரையில் இறையருளால்

        அமையுமுடல் நலமுடனே

இதுவரையில் அடைந்தபுகழ்

        இனும்மிகுந்து வளர்வகையில்

புதுகைநகர்த் தருமராசன் -

        பானுமதி வாழ்கவாழ்க!

 

 

தருமராசன் 80 நிறைவு மலரில் வெளியானது.