Tuesday, October 27, 2009

மீனாக்ஷி நவமணி மாலை

1. கட்டளைக் கலித்துறை

விண்ணில் நிலவில் இருள்போக வீசும் ஒளிக்கதிரில்
மண்ணில் மலையில் கடல்நீரில் காற்றினில் மானிடரில்
சின்னப் புழுவில் எனவெங்கும் தானே செரிந்துறையும்
நின்னை அறியும் நெறிகாட்டும் மீனாக்ஷி நின்னருளே!

2. குறட்பா

அருளால் அரசாளும் அம்பாள் கருணை
பெருகியே பொங்கும் புனல்.

3. இன்னிசை வெண்பா

புனலாடல் ஓதலொடு பூசையிடல் இன்றேல்
மனதால் நினைக்க மகிழ்ந்தருளும் தாயாய்
மலைபோல் வருமெனினும் மாதவனின் தங்கை
இலையெனச் செய்வள் இடர்.

4. அறுசீர் விருத்தம்

இடரெல்லாம் நீங்க உன்றன்
இருபதம் பணிந்து நின்றேன்
சடையெனும் மகுடம் ஏறும்
சந்திரன் கங்கை யோடும்
விடையிலே அமர்ந்த தேவன்
வெற்பினன் மகிழ்ந்தே ஏற்ற
இடவுடற் பாதி சக்தி
இன்னருள் அடையப் பெற்றேன்.

5. கலி விருத்தம்

பெற்ற நம்பிற விப்பிணி நீங்கிட
உற்ற மெய்ப்பொருள் தானென வானவள்
பற்ற அங்கயற் கண்ணியின் தாளிணை
அற்று நீங்கிடும் ஆள்வினை யாவுமே.

6.அகவல்

யாவுமே தானாய் ஆகிய தோர்பொருள்
மேவு முலகினில் மிகுபுகழ் பாரத
மண்ணில் விளங்கும் மதுரைமா நகரில்
சென்னியில் பிறையைச் சூடிய சுந்தரன்
ஆலயக் கருவறை அர்ச்சையாய் நிற்கும்
கோலம் பக்தி கொண்டவர்க் கென்று
உருவொடு வந்தே உவந்து
அருகில் நின்று அருள்செயத் தானே!

7. நேரிசை வெண்பா

தானே தவமிருந்து அத்தகுதி பெற்றதுவோ
வானோரே சேரும் வழியறியார் - ஏனையர்க்கும்
மெய்வழி காட்டிடுமோ மேன்மையுறு மீனாக்ஷி
கையில் அமர்ந்த கிளி.

8. தரவு கொச்சகக் கலிப்பா

கிளியேந் தியகையும் கொவ்வை நிறவாயும்
ஒளிருந் திருமுகமும் வைரத் திருமுடியும்
மின்னேர் இடையினில் மேகலையும் தாளிணையும்
எந்நாளும் நெஞ்சில் இருத்தி வணங்குவனே.

9. எண்சீர் விருத்தம்

வணங்கமலர் கொண்டுவரு வோரும் மற்றும்
வாய்கொண்டு திருநாமம் சொல்வோ ரென்றும்
சனங்கலெலாம் உனைத்தேடி உள்ளே செல்ல
சிரித்தமுகத் தொடுவந்து கோவிற் சுற்றில்
கனகத்தா மரைக்குளத்தின் படியில் இங்கே
கவிதையிலே அழைக்கின்ற அன்பர் கூட்ட
மனக்கோயிற் குடிகொண்ட தாயே! அம்மா
மலைமகளே உன்னருளை வேண்டு கின்றேன்.

(மதுரை அருள்மிகு மீனாக்ஷி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளக்கரைக் கவியரங்கில் பாடியது. அக் - 2003)

2 comments:

Soundar said...

மீனாட்சி நவமணி மாலை மிக அருமை. இந்தப் பாடலைச் செவிமடுக்கவே கிளியைக் கையிலேந்துகிறாளோ அன்னை மீனாட்சி!

சங்கத் தமிழ்வளர்த்த சான்றோர் வழித்தோன்றல்
அங்கயற் கண்ணியுனைப் பாடுமிச் சொன்மாலை
செய்ய மொழிகொண்டு தேவி உனக்குரைக்கக்
கையில் அமர்ந்த கிளி

அறுசீர் விருத்தத்தில் விளம் மா தேமா என்ற வாய்பாடு அமைய வேண்டும். சடையெனும் மகுடம் ஏறும் என்றிருக்கலாம்.

A Rajagopalan said...

பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
அ.ரா.