Tuesday, December 31, 2024

படித்ததும் கேட்டதும் – 46

 

தன்னைப் பிறருயர்வாய்த் தான்நினைக்க வேண்டுமென

எண்ணிக் குறைமறைப்பார் எத்தனைபேர்? – உன்னுயரம்

நீயறிவை ஊரார் நினைப்பெண்ணல் தோன்றுமன  

நோயுளமை காட்டும் நிலை.


(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)


Friday, December 13, 2024


 

   எங்குராம ராமவென்ற ஓதலோசை கேட்குமோ

      அங்குநீரு குத்தகண்க ளோடுகைகள் கூப்பியே

      தங்கியஞ்ச லிக்குமாஞ்ச நேயர்தீமை மாய்த்தமை

      தங்குநெஞ்சி னோர்கள்வாட நேருதுன்ப மில்லையே.

 

      

(ஆஞ்சநேயர் மீதான, ‘யத்ர யத்ர ரகுநாத      கீர்த்தனம்’ என்று  தொடங்கும் வடமொழி ஸ்லோகத்தின்  பொருளை உள்ளடக்கியது.)

Saturday, November 30, 2024

படித்ததும் கேட்டதும் --- 45

 

தோடகம்   

 

பொருளோ டுளசீர் இருநான் குளதாய்

   புளிமா வெனவே யுளவீ ரடியாய்

வருமோ ரெதுகை வளமோ னையதாய்

   வரைவார் புலவோர் அதுதோ டகமே.

 

முகநூல் சந்தவசந்தக் குழுமத்தில், தோடக சந்தம் பற்றிய, திரு. இலந்தை ராமசாமி அவர்களின் இழையில், அதன் இலக்கணத்தை அதே சந்தத்தில் எழுத முயன்றது.

படித்ததும் கேட்டதும் -- 44

 

வலிமை வனப்பு வளர்செல்வம் வாய்த்த

புலமையிவை நில்லாது போகும் --  உலகில்

உயிரிழந்தும் வாழ்வுதரும் ஒன்றப் புகழே

உயிரினும் மேலாம் உணர்.


ஈற்றடிக்கு எழுதியது.

Tamilauthors.com   July 2020

Sunday, November 24, 2024

படித்ததும் கேட்டதும் – 43


 சாதி மதமென்று சாற்றிப் பலநூறு

பேதங் களைக்கண்டு பேணுகிறோம் – போதும்

தலையாய தான தொருமனித நேயம்

கலையாது காத்தல் கடன்.


ஈற்றடிக்கு எழுதியது.

 Tamilauthors.com Minnithazh. 7.1.2019



Friday, November 15, 2024

படித்ததும் கேட்டதும் – 42


 

காற்சட்டைப் பைகளிற் கைவிட்ட வாறேணி

சாற்றியதி லேறுவது சாத்தியமா? – தோற்றே

இழைப்பஞ்சி நின்றாரால் ஏதியலும்? இங்கே

உழைப்பின்றி வாரா துயர்வு.

 

ஈற்றுச்சீர் முற்றியலுகரத்திற்குக் காட்டு;

‘இனத்தியல்ப தாகும் அறிவு’ -குறள் 452 (சிற்றினம் சேராமை)


கருத்து; Vikasa Manthras , VIHE Ramakrishna Math, Hyderabad.

Friday, October 25, 2024

படித்ததும் கேட்டதும் – 41

 



 அங்கத்தில் மொய்த்தவா றஞ்சாச் சிறுபூச்சி

சிங்கத்தைச் சீற்றமுறச் செய்யுமே -  நங்காய்

சிறியவையென் றென்றுமுதா சீனப் படுத்தல்

அறிவுடைமை ஆகா தறி.

 

(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)

Wednesday, October 23, 2024

படித்ததும் கேட்டதும் - 4 0

 

 

 முகத்தில் அழுக்குளதை முன்வருவார் கண்டும்

அகத்துள் நகைகொண் டகல்வார். -  பகரார்

முகம்பார்க்கும் கண்ணாடி முன்னுளதே காட்டும்

நகைக்காது நன்று நமக்கு.



(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)


Friday, October 18, 2024

படித்ததும் கேட்டதும் -39

 

   

தேடித் தமிழ்ப்பண்கள் தாளங் களையாய்ந்து

வாடுந் தமிழிசைக்கு வாழ்வளிக்க – நாடுவதார்?

கூடித் தமிழ்ப்பாடல் கர்நா டகஇசையில்

பாடி மகிழ்வோர் பலர்.

 

ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com

Monday, October 07, 2024

‘ஆளுமைக்கோர் விண்மீன்’

 

சென்னை உலகத் திருக்குறள் மையம், குறள் ஞானி, மோகனராசு ஐயாவின் துணைவியார், கு. சாந்தி அம்மையார் நினைவரங்கம்.

வள்ளுவர் கோட்டம் 1.6.2019.

 

குறட்பாக் கவியரங்கம்.

தலைமை;  முனைவர். திரு. குமரிச்செழியன் அவர்கள்.

பொதுத் தலைப்பு; ‘ஆளுமைக்கோர் விண்மீன்’

தனித் தலைப்பு; ‘ஆற்றலாளர்’

 

மோகன ராசுவெனும் முன்செலுத்தும் வள்ளுவத்தேர்ப்

பாகனைநீ நெஞ்சே பணி.

 

ஆற்றலாளர்

 

1.   பன்முக வாற்றலினைப் பெற்றிருந்த சாந்தியெனும்

பெண்மணிக் கீடார் பகர்.

 

   2,  சிற்றூரில் ஊர்வலங்கள் சென்று குறள்பரப்பப்

      பெற்றமன வாற்றல் பெரிது.

 

   3.  விதந்து பிறர்போற்ற வேண்டுதிறன் கொண்டே

      இதழ்ப்பணிகள் செய்தா ரிவர்.

 

   4.  கூட்டங்கள், மாநாட்டில் கொள்கை எதிர்நின்றார்

      போட்டியிடர் போக்கியமை நன்று.

 

   5.  குறள்மைய மேலாண்மை கொண்டியக்கு மாற்றல்

      பிறர்கண்டு போற்றியதைப் பேசு.

 

   6.  ஆசிரியர் மன்றத்தின் ஆய்வுமா நாட்டுரைகள்

      பேசியது வெள்ளப் பெருக்கு.

 

   7.  நுண்மாண் நுழைபுலமும் நூலியற்றும் வல்லமையும்

      கொண்டுபுகழ் கொண்டாரைக் கூறு.

 

   8.  போற்று முழைப்பும் புரிபணியில் தீவிரமும்

      ஆற்று திறமும் அழகு.

 

   9.  குறள்வழிநின் றில்லியக்கிக் காட்டியமை பாரில்

      பிறரும்பின் பற்றும் படி.

 

   10.  ஆற்றல் மிகவுடைய அம்மை புரிந்தபணி

       போற்றி வணங்கும் புவி.

 

 

      சாந்தி அம்மையார் பற்றிய, குறள் ஞானியாரின்       கருத்தோட்டத்தைக் குறள்நடைப்படுத்தியது;

 

         வீரம் அமைதிக்குள் வீற்றிருக்க வீரத்துள்

         ஈரமிருந் தாற்போ லிவர்.

Thursday, October 03, 2024

படித்ததும் கேட்டதும் – 38

 


 

கூரிய பார்வை குறிப்போ டியங்குதிறன்

காரியத்திற் கண்ணிவற்றைக் கண்டறிவாய் --- நேரிழையே

உச்சியிற் கட்டடத்தில் உட்கார்ந்த காகமதை

மெச்சிப் பருந்தென்னல் மிகை.


“A person becomes great not by sitting on some high seat, but through higher qualities. A crow does not become eagle simply by sitting on the top of a palatial building”   -- Chanakya

Vikasa Mantras, VIHE Ramakrishna Math, Hyderabad 

Monday, September 23, 2024

 

யார் மகிழ்வெய்த ஆழ்கடல்

 

கார்மகிழ் வெய்திடக் காற்றலை வீசும் ககனவெளி

நீர்மகிழ்ந் தோடிட நீள்கரை கொண்ட நிலத்துவழி

நார்மகிழ் வெய்திட நறுமலர் ஈகிற நந்தவனம்

யார்மகிழ் வெய்த அழகிய மீனுள ஆழ்கடலே?

 

சந்தவசந்தத்தில் எழுதிய கட்டளைக்கலித்தறை 8.10.2018

Friday, July 05, 2024

நின்ற வாசல் நிலையினாளே!

 


(நிலைமண்டில நேரிசை ஆசிரியப்பா)

 

நெய்தல்

நிலம்; கடலும் கடல்சார்ந்த இடமும்.

மக்கள்; பரதவர், பரத்தியர்

ஒழுக்கம்; இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

மரம்; புன்னை, ஞாழல்

உயிரினம்; கடற்காகம், சுறா மற்றும் கடல் மீன்கள்.

 

 

 

புன்னை நிழலில் போக்கிய பொழுதுகள்

எண்ணி மகிழ எத்தனை யுண்டு.

ஒன்றும் மனதில் உளதிலை யாக

அன்று மாலை அவன்பிரி வுரைத்த,

ஒன்றே நின்றவள் உயிர்வதை செய்தது.

கன்னந் தொட்ட கைவிரல் பற்றி

அறுதினம் மட்டும் அலைமேற் செல்ல

உறுதி யுரைத்த தொருபொய் யெனவாய்,

அறுதின மிருமுறை யாயின பின்னும்

வருவது நிகழும் வாய்ப்பில தாக .....

காயும்  உணங்கலைக் காக முண்பதை

நேயன் நினைப்பில் நேரிழை காணாள்.

உணக்கிய மீனை ஊரில் விற்கையில்

கணக்கு மறந்து கைமுத லிழந்தாள்.

இன்று வருவன் இன்று வருவன்

என்றே தினமும் எதிர்பார்ப் பவளாய்க் .....

குழம்பி லயிரை குறையா திட்டுக்

கொழுமீன் பொரியல் கூடச் செய்து

வெண்சோ றாக்கி வைத்திருக் கின்றாள்

இன்றவன் வருகை நோக்கி

நின்ற வாசல் நிலையி னாளே!



உணங்கல்; -- உப்பிட்டுக் காயவைத்த மீன்

அயிரை, கொழுமீன் ஆகியவை மீன் வகைகள்.

 

 


Thursday, May 23, 2024

கொண்டவ னடைந்த குறுசினந் தீர...

  ( நிலை மண்டில நேரிசை ஆசிரியப்பா.)


மருதம்

இடம்; வயலும் வயல்சார்ந்த இடமும்.

மக்கள்; உழவர், உழத்தியர்

ஒழுக்கம்; ஊடலும் ஊடல் நிமித்தமும்

உயிரினம்; நாரை, அன்னம், நண்டு

 

 

கதிரெழு முன்னர் கடன்கள் முடித்து

பொதுவெளி வந்து போய்வரல் சுட்டும்

அவனது செயலி லன்றுள மாற்றம்

தவறுள தாகத் தானுணர்ந் தவனின்

அதிவிரை வறியா தவள்முகம் வினவ,

பதிலுரை யின்றிப் பணிமேற் சென்றனன்....

வாய்ச்சொல் மீறி வரம்பில தாகப்

போய்விடு மென்று புறமே திரும்பி,

முன்தின மிரவில் முகங்கொட மறுத்த,

தன்செயல் வருத்தத் தளர்ந்தா ளாகி,

நண்டி னிருப்பிடம் நாரை யிரண்டு

கண்ட களிப்பிற் கூடி நடந்து,

உண்டது கண்டு முவந்திள லாகக்

கொண்டவ னடைந்த குறுசின முறுத்த,

கரத்துள கலயங் கசியா தாக

வரப்பினில் நடந்து வழிமடை தாண்டினள்.....

உழவுப் பணியி லுடற்சோர் வுற்று,

நிழல்மரஞ் சேரும் நேரம். கொழுநன்

குற்றி யொட்டிய புற்களைக் கையால்

பற்றிக் களைந்து நிமிர,

நெற்றி துடைக்க நீட்டினள் முந்தியே!

 

 

 

 

குற்றி -– வயலினிடையே முன்பிருந்த மரத்தின் அடித் தூர்.

குற்றியடைந்த புல் உழவர் உழுபடைக்கு ஒல்கா தாதலின், கைகளால் பற்றிக் களைந்தனன்.

முந்தி -- முன்றானை.

 

ஐந்திணை இருநூற்றைம்பது நூலில் தொகுக்கப்பட்டு வெளியானது.

Saturday, May 18, 2024

யாரிடத்துத் தாமுரைக்கப் போம்

 


 

    முறுக்கொடு சீடை முழுக்கரும்பும் முன்னர்

நொறுக்கிச் சுவைத்ததனால் நோவைப் – பொறுத்திடுவோம்

வேரின்றிக் கெட்டு விழும்பற்கள் தம்துயரை

யாரிடத்துத் தாமுரைக்கப் போம்.


 

சந்தவசந்தம் 1.7.2019 பல்வலி என்ற இலந்தையார் இழையில்.

 

Monday, May 13, 2024

கண்ணீரில் தோய்ந்த கதை.

 


 

காத லறங்காத்த கண்ணகி தன்துணையை

ஏதும் தவறிழையாள் ஏனிழந்தாள். --- மாதுகதை

மண்ணிலுளோர் கேட்டு மயங்கி மனமுருகிக்

கண்ணீரில் தோய்ந்த கதை.

 

ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com March 2020

கூட்டுக் குடும்பம்

 


 

வீட்டிற் குடிவருவோர் வேறெவரும் வேண்டாம்

கூட்டுக் குடும்பமெனிற் கூறென்றேன். --- கூட்டிவந்து

கூட்டே உணவென்று கொள்ளும் குடும்பத்தைக்

காட்டி நகைத்தானே காண்.

 

சந்தவசந்தம் 29.4.2019

ஆடித்தேர்

 


 

நோட்டட்டை குச்சிகள் நூல்கொண்டு தேர்செய்தான்

ஓட்டையிட்ட மூடி உருள்வதற்கு – ஓட்டினான்

ஆடியது ஆடியது அங்கங்கே சாய்ந்தது

ஆடித்தேர் என்றான் அவன்.

 

சந்தவசந்தம் 27.4.2019

Friday, May 10, 2024

வாழாதார்க் கில்லை வரம்

 

 பெறத்தக்க மூன்றில் பொருளொடு மின்பத்தை
 அறத்தின் வழியே அடைக. -- அறநெறியில், 
தாழாதார்க் குண்டு தகவுடைமை. அவ்வழியில் 
வாழாதார்க் கில்லை வரம்.

ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthers.com. Minnithazh, Feb. 2019