Monday, August 26, 2013

சுதந்திரத் தேவி தாயே!


 
உண்மைகள் வாழவும்
……....உறுதுயர் ஒழியவும்
……….........உலகினில் ஒழுக்க மோங்கவும்
......உனதரும் புதல்வரில்
……......உயர்புகழ்க்  காந்திபோல்
………........உத்தமர் ஒருவர் வேண்டும்.
 

உன்னவர் நடுவிலே
………...ஊழலும் லஞ்சமும்
.................ஒழிந்திடப் பாடவேண்டும்
……..உறையிருள் மறைந்து
.............ஒளிபெறப் பாரதி
…………………ஒருவனும் இன்று வேண்டும். 
 

எண்ணிய முடிக்கவும்
...........எதிர்பகை வீழ்த்தவும்
.................இளையவர் தலைமு றைக்கு
……. ஆற்றலும் வீரமும்
.............அஞ்சாத நெஞ்சமும்
......................அமையநீ அருள வேண்டும்.

சென்னியிற் குங்குமம்
..........செவ்விதழ்ப் புன்னகை
....................சிறந்திடுங் கருணை மாதே!
……..சத்தியப் பேரொளி
.............சமத்துவ நாயகீ!
...................சுதந்திரத் தேவி தாயே!
 
'நம் உரத்தசிந்தனை' மாத இதழ். ஆக.2013

 

 

 

No comments: