Friday, March 08, 2013

மாதரைப் போற்றுகின்றேன்



விண்ணியல் தெளிந்தோ ருண்டு
...வேதியல் முதலா யுள்ள
எண்ணிலா வகையி லின்று
...இயங்கிடுந் துறைக ளூடே
பெண்ணிலா தேது முண்டோ?
...பெருமையில் மிக்கோ ராக
மண்ணிலே வாழு கின்ற
...மாதரைப் போற்று கின்றேன்.


நுண்ணறி வோடு கூட
...நூல்பல கற்ற போதும்
பெண்ணறி வென்ப தென்றும்
...பேதமை மிக்க தென்று
முன்னவர் சொன்ன சொல்லை
...முழுவதும் பொய்யென் றாக்கி
மண்ணிலே வாழு கின்ற
...மாதரைப் போற்று கின்றேன்.


பெண்மையே அன்பின் தோற்றம்.
...பிறந்துள உயிர னைத்தும்
பெண்மையின் ஜீவ ஊற்று.
...பெண்மையே உலக வித்து.
பெண்மையே விளங்கு கின்ற
...பெரியதோர் சக்தி தெய்வம்.
மண்ணிலே வாழு மந்த
...மாதரைப் போற்று கின்றேன்.


பாரதி கலைக்கழகம். 21.3.2010

No comments: