Sunday, March 03, 2013

கவிதை இன்பம்



நீலக் கடலதன் நீரென ஓர்கவி
...நெஞ்சில் அலைவிரிக்கும் - அதைக்
காலைக் கதிரவன் கைதொடு போதுபோற்
...கண்ணில் பளபளக்கும்.

சிந்தை கவரொரு சிட்டுக் குருவியைச்
...சித்திர மாய்வடிக்கும் - கவி
விந்தை மனம்முன்னர் வீழ்ந்து கிடந்தது
...விண்ணிற் சிறகடிக்கும்.

தீர்த்தக் கரையினில் தென்றற் சுகமொடு
...தீங்கனி உண்பதுபோல் - கவி
பார்க்கும் படியில்லாப் பாதை நடையிலும்
...பாடச் சுவைகிடைக்கும்.

பூத்த மலர்வனப் பூவின் நறுமணம்
...பாடல் நிறைத்துவிடும் - நெஞ்சில்
கோத்துத் தொடுத்திட்ட கொஞ்சு தமிழ்க்கவி
...கோலம் வரைந்துவிடும்.

சந்த மழைவந்து சற்றுப் பொழிந்திடில்
...சிந்தை மயக்கிவிடும் - கவி
தந்த பொருளதில் மின்னல் இடிவந்து
...தங்கி நிலைத்துவிடும்.

பாரதி கலைக்கழகம் - கவிமாமணி சவகர்லால் பவள விழாக் கவியரங்கம். 20.8.2011

No comments: