Thursday, June 30, 2016

பூவாய் மலரும் புகழ்



படைப்பில் அரும்பிப்
பலரும் படிக்கக்
கிடைக்குமெனில் போதாகும். 
கண்டு - படைத்தவரை
நாவாற் புகழ்ந்து
நலஞ்சேர வாழ்த்துகையில்
பூவாய் மலரும் புகழ் 


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா. தமிழரின் மனிதநேயம். ஜன. 2010.

Friday, June 03, 2016

காலின் கூலி


வறியவராய் நின்று வேறு
    வழியில்லா திரப்போர்க் கொன்று
பரிவுடனே வழங்கல் ஈகை.
    பிறவெல்லாம் அவற்றின் வேறாய்க்
குறியெதிர்ப்பை யுடைய வென்று
    குறளொன்று கூறக் கண்டோம்.
செறிவுடனவ் வீகை வகையிற்
    சிலபற்றி ஔவை சொன்னாள்.


தன்னையோர் வறிய ரண்டித்
   'தா'வென்று கேட்ப தற்கு
முன்கொண்டு தானே சென்று
    முடிந்தவரை வழங்கு மீகை
மண்ணிதனிற் புலவோர் போற்று
    மானிடரின் குணங்க ளுள்ளே
உன்னதமென் றுரைப்ப தான
    உயரிய'தா ளாண்மை' யாகும்.


முன்வினையால் வறுமை தன்னில்
   மூழ்கியதோர் ஏழை தானே
தன்னிடத்தே அண்டி வந்து
   தாழ்நிலையைக் கூறி வேண்ட,
அன்புடனே இரங்கி நெஞ்சம்
   அவர்துயரைக் களைதற் காகத்
தன்னிடத்து நிறைந்த செல்வம்
   தனைக்கொண்டே ஈதல் 'வண்மை'.


'இன்றில்லை நாளை' யென்றும்
    'இன்னொருநாள் வாநீ' யென்றும்
'பன்முறையு மலையச் செய்து
    பாதங்கள் நோக விட்டு
என்றேனு மொருநாள் ஈதற்
    கேதுபெய' ரென்று கேட்டால்
நன்றில்லா ஈகை அஃது
    நடந்து வந்த 'காலின் கூலி'.



தண்டாமல் ஈவது தாளாண்மை தண்டி
அடுத்தக்கா லீவது வண்மை. அடுத்தடுத்துப்
பின்சென்றா லீவது காற்கூலி பின்சென்றும்
பொய்த்தா னிவனென்று போமேல் அவன்குடி
எச்ச மிறுமே லிறு.       - ஔவையார்


பாரதி கலைக் கழகம், வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபம்,
மூவரசம் பட்டு. 23.4.2016

Friday, April 29, 2016

எதிராசர் புகழ் பாடுவோம்



சித்திரை ஆதிரை நாளதி லாதி
   சேஷனிங் கோரவ தாரம் செய்தார்.
இத்தனை புண்ணியம் மண்ணிது செய்ததோ
   என்ன உடையவர் வந்து தித்தார்.

வேறுள வாகம வாதியர் தோற்றிட
   வென்று புகழ்பல தேக்கி வைத்தார்.
ஆறு சமயமென் றான செடியினை
   அற்றிட வேறுடன் போக்கி வைத்தார்.

பொங்கும் பரிவுடன் மாறனு ரைதமிழ்
   போற்றும் வழியினை ஆக்கி வைத்தார்.
எங்கள் அரங்கனின் செல்வ முழுமையும்
   ஏற்ற வகையினில் மாற்றி வைத்தார்.

ஓதி அவருரை ஊன்றிய றிந்திங்கு
   உய்யும் வழியினைத் தேடி டுவோம்.
ஏது துயரினி என்று மகிழ்ந்தெதி
   ராசரவர் புகழ் பாடி டுவோம்.


அன்புப் பாலம்  ஏப். 2018.

Thursday, April 28, 2016

மூன்றெழுத்து மந்திரம்- அம்மா



தனைப்போலே இன்னொருத்தி இல்லை யாகத்
   தனித்துவத்தோ டிம்மண்ணில் வந்து தோன்றி
மனைவாழ்வில் உற்றதுயர் பலவுந் தாங்கி
   மாதரசி என்றபெயர் நிறுத்திப் போனாள்.
நினைவெல்லாம் தானேயாய் வீற்றி ருந்து
   நிதமுமெனை வழிகாட்டி நடத்துந் தெய்வம்
எனைப்பெற்றாள் திருப்பெயரை என்று மோதி
   எஞ்சியநாள் ஆயுளைநான் கழித்து வாழ்வேன்.


எட்டியெனை நில்லென்று சொன்ன தில்லை
   எப்படிநான் அவளன்பை மொழியக் கூடும்?
பட்டினியாய்த் தான்கிடந்த நாளில் கூட,
   பசித்திருக்கும் படியென்னை விட்ட தில்லை.
மட்டில்லா மகிழ்சியுடன் எனைப் புரந்த
   மாதவளோ தெய்வமென வாகிப் போனாள்.
விட்டுவிடா தவள்பெயரை நினைவில் வைத்து
   வீழ்கின்ற நாள்வரையில் போற்றி செய்வேன்.


எந்தவொரு துயர்வரினும் கலங்கி டாதே
   என்தாயின் திருவுருவை நெஞ்சிற் கொண்டு
மந்திரமாய் அவள்பெயரின் மூன்றெ ழுத்தை
   மனதிற்குள் உச்சரித்து வேண்டி நிற்பேன்.
வந்ததுயர் சுவடின்றி நீங்கிப் போகும்.
   வார்த்தைகளிற் சொல்லுதற்கே இயல வில்லை.
அந்தமென வாழ்வில்வரும் நாள்வ ரைக்கும்
   அவள்பாதம் துணையெனவே வாழ்ந்தி ருப்பேன்.


திருவள்ளுவர் இலக்கிய மன்றம். வாணுவம் பேட்டை. சென்னை. 9.4.2016

Saturday, March 26, 2016

வெற்றி வசப்படும்



விண்ணில் செயற்கைக் கோள்செலுத்தி - அதை
    விரலால் இயக்கி வென்றோமால்
மண்ணில் இமயச் சிகரமெலாம்  - இனி
    மனிதர் இலக்காய் நின்றிடுமோ?

உயரம் எதுவும் பெரிதில்லை - நீ
    ஒவ்வொரு படியாய் மேலேறு
பெயரும் புகழும் உனைத்தேடி - நிச்சயம்
    பின்னால் வரும்நீ முன்னேறு.

அமையும் இதுவெனும் நம்பிக்கை - அது
     அடையும் இலக்கை எளிதாக்கும்.
சுமையாய் இதுவரை எண்ணியதை - இலை
     சுலபந் தானெனத் தெளிவாக்கும்.

உன்னால் முடியும் எனநம்பு - அது
     ஒவ்வொரு முறையும் நிசமாகும்.
முன்னால் முயன்றது நிறைவாயின்
     முடிவில் வெற்றியுன் வசமாகும்.  


பாரதி பாரதிதாசன் கவிதை அமைப்பு. கவிஞாயிறு தாராபாரதி விழா, வாழ்க வளமுடன் சிற்றரங்கம்
நங்கநல்லூர். 27.2.2016

Tuesday, March 08, 2016

நாட்டு நலம் காப்போம் நயந்து


வாட்டுவிலை வாசி
 வளர்லஞ்ச ஊழலொடு
கேட்டுத் திகைக்கும்
 கொலைவெறியும்
 -  ஓட்டிடுவோம்
ஓட்டைத் தவறா(து)
உயர்குணத்தோர்க் கேயீந்து
நாட்டுநலம் காப்போம்
நயந்து.

ஓட்டு: வாக்கு.

தமிழரின் மனிதநேயம், மே 2009.  ஈற்றடிக்கு எழுதியது.

Sunday, February 28, 2016

நட்புச் சிறகுகள்



நட்பெனுஞ் சிறகு கொண்டு
   நாடெல்லாம் பறக்க லாகும்.
எட்டிட இயலா தென்று
   ஏதுமே இல்லை யாகும் !

மும்பையில் டில்லி மற்றும்
   மூலையில் முடுக்கி லெல்லாம்
நம்பியொரு வேலை சொல்லின்
   நடத்தியே முடிப்போ ருண்டு.

கையினிற் செலவு செய்யக்
   காசில்லாப் போது வந்து
பையொடு பணத்தைத் தந்து
   பார்த்துளம் மகிழ்வோ ருண்டு.

துன்பத்தில் உழலும் போது
   தோள்தந்து பாதி தீர்ப்பார்.
இன்பத்தில் பங்கு கொண்டே
   இரட்டிப்பாய் ஆக்கி வைப்பார்.

அச்சமே இல்லை. செய்ய
   அரியது மேது மில்லை.
இச்சக முழுதும்  என்போல்
   எவருளர் நண்ப ரோடு? 

Wednesday, February 17, 2016

பயனென்ன?



சாத்திரமும் சூத்திரமும்
சார்ந்தபல நூலறிவும்
பாத்திறமும் கொண்டு
பயனென்ன? - காத்திருந்து
ஏத்தபடி கேட்போர்க்
கெடுத்தியம்ப லாற்றாதார்
பூத்திருக்கும் நாற்றமிலாப் பூ!

நம் உரத்த சிந்தனை ஆகஸ்ட் 2009. 'பூத்திருக்கும் நாற்றமிலாப் பூ'!என்ற

 ஈற்றடிக்கு எழுதிய வெண்பா (2).

Monday, January 18, 2016

நல்ல பழக்கங்கள்

(சிறுவர் பாடல்)


நல்ல பழக்கம் பலவுண்டு - அதில்
    நாலைந் திங்கே சொல்லுகிறேன்.
வல்ல நீயவை கைக்கொண்டு - உன்
    வாழ்வில் நிச்சயம் வெல்லுவையே!

உண்டதன் பின்னர் நிச்சயமாய் - உடன்
    உன்கை கழுவுதல் அவசியமே.
உண்ணும் முன்னரும் கைகழுவு - அது
    ஒவ்வொரு முறையும் அவசியமே!

ஈயும் எறும்பும் மொய்க்கின்ற - எந்த
    இனிப்புப் பண்டமும் நாடாதே.
வாயில் எச்சில் வரவைக்கும் - அதை
     வாங்கித் தின்ன ஓடாதே!

பாயில் உன்னைப் படுக்கவைக்கும் - வரும்
    பலவகைச் சுரமுன்னை வாட்டிவிடும்.
நோயில் லாத வாழ்வுக்கு - வேறு
      நேரிலை என்றே காட்டிவிடும்!

காட்டு மிருகக் கதைகளெலாம் - சொல்லும்
    கருத்தை மனதில் இருத்திக்கொள்
பாட்டி கதையென இகழாதே! - அதில்
    பாடம் உண்டுனைத் திருத்திக்கொள்!

சரியாய்த் தமிழைப் பேசுதற்கு - நீ
    சிறிது முயன்றால் கற்றிடுவாய்.
பெரியோர் சொற்படி நடந்திடுவாய். -  நல்ல
    பேரும் புகழும் பெற்றிடுவாய்!

பாரதி கலைக்கழகம். அழ.வள்ளியப்பா பாடலரங்கம். லக்குமிஅம்மாள் நினைவு மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி. குரோம்பேட்டை. 28.11.2015.

Thursday, October 29, 2015

எம் இளையோர் எழச்செய்தாய்


விண்ணேகு செயற்கைக்கோள் செலுத்துகின்ற வாகனங்கள்
எந்நாடும் கொளநினைக்கும் ஏவுகணைச் சாதனங்கள்
முன்னேறு விஞ்ஞான முயற்சிகளில் முதலிடமென்(று)
என் நாடு வளர்வதெலாம் உன்னாலே ஆனதையா!

ஏவுகணை விஞ்ஞானம் எங்களுக்கும் வேண்டுமென
தேவருனைக் கேட்டனரோ? தேர்ந்தங்கு சென்றனையோ!
ஆவலுடன் வல்லரசாய் ஆகும்நாள் பார்த்திருக்க
போவதற்கிவ் அவசரமேன் புண்ணியனே கட்டுரையே!

பன்னாட்டுக் கருத்தரங்கம் பலகண்ட பெருமகன் நீ!
என் நாட்டுத் தலைமகனாய் எங்கெங்கு சென்றாலும்
தென் நாட்டுத் தமிழ்முப்பால் தனிச்சிறப்பை எடுத்தியம்ப
உன்னாற்றான் முடிந்ததையா! இனிசெய்வார்  யாருளரோ?

கனவென்றால் உறங்குகையில் கண்பதல்ல. நினைத்தவைகள்
நனவாகும் நிலைகாணும்  நாள்வரையி லொருநாளும்
உனதுள்ளம் உறங்காது. ஓயாது செயலாற்றும்
எனுமுன்றன் உரையாலே எம்மிளையோர் எழச்செய்தாய்!

செய்தித்தாள் வீடுகளில் சேர்த்துவந்த நாள்தொடங்கி
எய்தியநின் புகழெல்லாம் எடுத்தியம்ப லாற்றாமல்
செய்தித்தாள் திணறியதே! செய்தியென வாயினையே!
எய்தபுகழ் நிலைநிறுத்தி எங்குற்றாய் இயம்பாயோ?


நம் உரத்தசிந்தனை. அப்துல் கலாம் நினைவு மலர். செப். 2015.

Wednesday, October 28, 2015

மாமன்

அன்னையவள் பிறந்ததான அருங்கோயிற் கருவறையில்
      அவளுக்குச் சோதரனாய்த் தோன்றினான்
பின்னொருநாள் மருகன் நான் பிறந்தபினர் மாமனெனும்
      பெருமையினைப் பெற்றவனாய் மாறினான்.
பொன்னணிகள் சீர்வரிசை புத்தாடை யவைபலவும்
      போதுமெனு மளவவனும் செய்து,தான்
துன்பமென வரும்போது துவளாமல் முன்வந்து
      தோள்தந்து உதவியெனைத் தாங்கினான்.

பாரதத்துச் சகுனிபோல பாகவதக் கம்சன்போல
      பாரினிலே மாமன்சில ருண்டுதான்.
நீரவரை மாமனென்று நினைத்தன்பு செய்வதற்கு
      நீதியொன்று மில்லையென்று சொல்லுவேன்!
பேரளவே உறவாகிப் பெற்றவளின் உடன்பிறந்து
      பேசமட்டும் மாமனென்றாற் போதுமா?
ஓரளவு கூடவன்போ டுறவாடு நெஞ்சமிலார்
      உண்மையிலே மாமனெனற் கூடுமோ?

இந்தியத்தாய் நாட்டிலுள்ள இளஞ்சிரார்க ளனைவருக்கும்
     எள்ளளவும் பந்தமற்ற போதிலும்
முந்தையநாள் பாரதத்தின் முதுதலைவர் நேருஎந்த
     முறையினிலே மாமனென்று ஆனவர்?
சொந்தமெனில் உடைமையெனச் சொல்லுகின்ற பொருளுண்டு
     சுகமுண்டு மகிழ்வுண்டு என்பரே!
விந்தையிது அன்பாலே விளைகின்ற உறவன்றி
     வேறேதும் இலையென்று சொல்வனே!

Thursday, October 01, 2015

காணிற் குவளை...


(தரவு கொச்சகக் கலிப்பா)

தண்ணீரி லேநின்று தழைத்துவளர் தாவரத்தின்
விண்பார்த்தே இதழ்விரித்து விளங்குகின்ற குவளைநிறம்
கண்பார்த்துக் களிக்கின்ற கருநீலம் அதைப்பெண்ணின்
கண்நேராய் உவமித்துக் கவிசெய்வர் புலவோர்கள்.

தெள்ளுதமிழ் நூல்களிலே தெவிட்டாத தொன்றான
வள்ளுவரின் முப்பால்நூல் வழங்குகின்ற காட்சியிது.
விள்ளரிய தலைமகளின் விழியழகைக் காணாதே
கள்ளொழுகு குவளைமலர் களிமிகுந்து நிற்கிறதாம்!

கண்ணில்லாக் குவளையது காணாது தானதனை
எண்ணித்தான் 'காணி'லெனும் எச்சத்தை இட்டுவைத்தார்.
கண்ணிருந்தவ் விழியழகைக் காணுமெனில் நாணுற்று
முன்னிருந்த படியன்றி முகங்கவிழு மென்றாரோ?

தண்ணீரில் நிற்பதொன்று தலைகவிழ்ந்தால் நாணத்தில்
தண்ணீரைத் தான் நோக்கும் தரைமண்ணை நோக்கிடுமோ?
வண்ணமலர் மணவோட்டம் வாய்மொழிதல் இயலாதால்
எண்ணமது என்னவென்று எண்ணியதில் தேர்ந்ததிது.

நீரிதனிற் பிறந்தேனே! நேர்ந்ததிது வினைப்பயனே!
பேரழகுக் கண்ணுடையாள் பிறந்ததுஅந் நிலமென்று
கார்நிறத்த பூ,நீரைக் காணவுமே தோன்றாது
போர்மனத்த தாகியதால் பொருமி'நிலம் பார்க்கு'மென்றார்!


காணிற் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்
மாணிழை கண்ணொவ்வே மென்று.        (குறள்)

பாரதி கலைக்கழகம். 20-6-2015. பேரா.நாகநந்தி நினைவு, திருக்குறள் விழா

Sunday, August 16, 2015

நீலச் சிற்றாடைக்கு நேர்.

(கட்டளைக் கலித்துறை)


பின்னர் வரவிடை பெற்றுட னவ்வை பிரிபவளை
இன்னுஞ் சிலநாள் இருத்திடப் பாரியங் கெண்ணியதால்
பொன்னும் மணியும் பரிசெனத் தந்தவை பாதையிலே
தன்னாள் சிலர்வழி, தான்பறி செய்தது தக்கதொன்றே!

கோலிதைக் கொள்ளெனக் கொடுத்தே அவ்வை களமளக்கும்
வேலையைச் செய்வதை வேண்டிய காரிபின் வேறோருதன்
வேலையிற் சென்று விடைதா மதித்ததில் வென்றதவள்
மேலுள வன்பின் மிகையால் அரியது மேன்மையதே!

தோரணை மிக்க தொருவருக் கோரிடந் தேடியன்று
சேரன் விருந்தினிற் சேர்ந்துண வுட்கொளச் சென்றமர்ந்தார்
ஆருளர் வேறே அழைக்கவென் றவ்வையை வாருமென்ற
ஓருளம் போலுள தேதுள? அன்பில் உயர்ந்ததுவே?

ஏல மணமுள இன்னடி சில்விருந் துண்டபினர்
கோலவம் மங்கைய ரங்கவை சங்கவை கொண்டளித்த
நீலநல் லாடை நிகருள மூன்றை நெகிழ்வுடனே
ஞால மறிந்திட நாலடி அவ்வை நவின்றனளே!


பாரி பறித்த பறியும் பழையனூர்க்
காரி யன்றீந்த களைக்கோலும் - சேரமான்
வாராயோ வென்றழைத்த வார்த்தையும் இம்மூன்றும்
நீலச் சிற்றாடைக்கு நேர்.     - ஔவையார் 

(தமிழ் நாவலர் சரிதை.)


பாரதி கலைக்கழகம். ஔவையார்  விழா. ஏப். 2015.

        

Wednesday, July 22, 2015

பத்ரிநாத் யாத்திரை வழித்தலப் பாடல்கள்


மதுரா (வடமதுரை)

மாயவனின் கோயில் மதுரா நகர்தேடிப்
போயங்கு சேவித்த பேறுடையேன் - ஆயனவன்
ஆவினத்தின் பின்போன அன்புடையன் என்போன்ற
பாவிக் கருளுவனோ பார்த்து?

கோவர்த்தனம்





அன்று மழைமறைத் தாயரெலாங் காப்பதற்குக்
குன்றுக் குடைபிடித்த கோவிந்தன் - இன்றுமுன்
இன்னல் மலைகரைய இன்னருள் மாரிபெய்வன்
என்ன பயம் நெஞ்சே இயம்பு?







பிருந்தாவனம்

வேதத் தமிழொலிக்கும் வில்லிபுத்துர்ச் சேவையது
கோதை அரங்கனுடன் கூடக் கருடனென
காதம் பலகடந்து கண்டபிருந் தாவனத்தில்
பாதம் பதித்த பயன்.






தேவப்ரயாகை (கண்டங் கடிநகர்)





பொங்கு புனலோடி, பூமி வளங்கொழிக்கும்
கங்கைக் கரையிலங்கு கண்டங் கடிநகரில்
தங்கி அருள்புரியும் தாமரையாள் கேள்வன்
எங்களிறை என்றே இரு.









பத்ரிநாத்






வாவென் றழைத்தது வும்வழிமண் மூடியதும்
ஆவ திதுவென் றறியுமுனர் - போவதற்கு
வேறுவழி காட்டியதும் வேறெவரா லாம்பதரி
நாரணனின் சேவடியே நாடு.

Tuesday, June 30, 2015

சிறியன சிந்தியாதான்


மன்னனின் மௌலி விட்டு மரவுரி தரித்து ராமன்
பின்னவன் அன்னை சொல்லே பெரிதெனக் கானம் புக்கான்
பெண்ணொடு பொருதல் தனது போரறம் ஏற்கா தேனும்
தன்னுடைக் குருவின் வாக்கால் தாடகை வீழச் செய்தான்.

தந்தைதாய் பேணல் விட்டு, தாரமும் விட்டுக் கானம்
எந்தைதாய் ராம னென்றே இலக்குவன் பின்னே போனான்.
நிந்தனை தாயைப் புரிதல் நேரிதாய்ப் பரதன் தேர்ந்தான்
முந்தைய விழும மாற்றம் மூளுசூழ் நிலையா லாகும்.

துணையென ராம னோடு தோழமை கொண்டு தம்பி
இணையிலா வலிய னுன்னை எதிர்த்திடத் துணிந்தான் என்ற
மனைவியைப் 'பிழைத்தாய்' என்று முனிந்துபின் வாலி சொல்வான்
'நினைத்தது தவற றத்தின் நாயகன் ராம னாவான்'

உறுபகை யொன்று மின்றி உயரறம் காக்கும் வீரன்
இருவராய்ப் பொருதும் போதில் இடையினில் வாரா னென்ற
உறுதியைக் குலைத்து மார்பை, உடலது மண்ணில் சாய,
ஒருசரம் துளைத்த போதில் உண்மையை நேரில் கண்டான்.

பாரியைப் பிரிந்து நிற்கும் பதைப்பினில் செய்து விட்ட
காரியம் மாறிற் றோ?நீ கொண்டதோர் பகையு முண்டோ?
சூரியன்  மரபுக் கொன்றும் சுடர்மதி மறுவே போல
ஆரியன் பிறந்து மண்ணில் ஆக்கினை. சொல்வ தென்ன?

வாய்மையும் மரபும் காத்த வள்ளலின் மைந்த னோநீ?
தூயவன் பரதன் முன்னர் தோன்றிய பெருமை எங்கே?
தீயவை அரக்கர் செய்ய,  தேர்ந்தொரு குரக்கு வேந்தை
மாய்வுறச் செய்யு மாறு மனுநெறி கூறிற் றாமோ?

இன்னவும் பிறவு மாக எழுப்பிய கேள்விக் கெல்லாம்
சொன்னவை பதில்க ளாகச் சிற்சில உண்டென் றாலும்,
முன்னராய் வந்து நின்று முடித்ததாய்க் கதையி லில்லை.
பின்னவன் வந்து (அ)தற்குப் பிறிதொரு விளக்கம் தந்தான்.

நன்றிது தீது வென்னும் நல்லறி வுடைய னென்றும்,
நின்றநன் நீதி யாவும் நேரிது உணர்ந்தா னென்றும்,
பின்னுமே மனுசெய் நெறிகள் புக்கபுத் தேளி ரென்றும்
சொன்னவன் ராமன். வாலி சிறந்தவன் ஐய மில்லை.

ஒன்றினில் ஒன்று மிக்க உயரற வரிசை தன்னில்
இன்னுமொன் றில்லை யென்னும் எல்லையை எட்டும் போதில்
உன்னதம் என்று நின்ற உயரிய விழும மெல்லாம்
சின்னவை யென்றே யாகிச் சிந்தனை விட்டு நீங்கும்.

சீர்மிகு ராம நாமம் சிந்தையில் தைக்கு மாறு
கூர்மிகு வாளி யொன்றால் கொண்டநல் ஞானத் தாலும்,
கார்முகில் கமலம் பூத்துக் கையினில் வரிவில் ஏந்தி,
'பார்'என வந்து நின்ற பரம்பொருள் கண்ட தாலும்

அறிவொளி கிடைத்த காலை அவியுறு மனத்த னானான்.
நெறியினில் நின்று சேரும் நீள்விசும் பருளப் பெற்றான்.
விரிகதை செய்த கம்பன் விருதெனும் புகழுஞ் சேர
சிறியன சிந்தி யாத சீர்மைய னாகி நின்றான்.

பாரதி-பாரதிதாசன் கவிதை அமைப்பு. நங்கநல்லூர். கம்பன் விழா.
24.3.2015.
 

Saturday, June 27, 2015

எழுவாய்


ஒற்றைப் புள்ளிச் சிறுகுறியால்
ஒருபெரு வரியே முடிந்துவிடும்.
முற்றுப் பெற்றது இலையாக - அதில்
மேலும் புள்ளிகள் இடவேண்டும்.

கரங்க ளிரண்டு சிறகுண்டு
கடின உழைப்பின் துணையோடே
உரங்கொள் மனதும் உளதானால் - நிச்சயம்
உயரப் பறப்பது எளிதாகும்.

தடைபல வந்து தடுத்தாலும்
தளரா மனதொடு முயலுகையில்
இடர்கள் வந்தவை இலையாகும் -நம்
இலக்கைச் சேர்வதும் எளிதாகும்.

புழுவாய் மண்ணில் உழன்றபடி
பொழுதைப் போக்கும் நினைவாலே
எழுவாய் எனுமுரை மதியாதார் - மண்ணில்
இருப்பதி லேதும் பயனிலையே!


தாராபாரதி பிறந்த நாள் நினைவு. பாரதி-பாரதி தாசன் கவிதை அமைப்பு. நங்கை நல்லூர். 26.2.2015

Thursday, May 28, 2015

நன்மைகள் நிலைக்கட்டும்


கால மெனுமவன் கண்களில் விண்ணிடைக்
காலை யுதயத்தைக் காட்டுகிறான் - பின்பு
ஞால முழுதையும் நள்ளிருள் உள்தள்ளி
நம்மிரு கண்களைக் கட்டுகிறான்.

போற்ற வளர்செடிப் பூவகை யாவையும்
பூமியில் நாளொன்றில் வாடிவிடும் - இங்கு
நேற்றுப் புதிதென நாமுண்டு மீந்ததின்
நாமம் பழையதாய் ஆகிவிடும்.

புத்தம் புதியதைப் போட்டு நடந்திடில்
பாதையிற் சேறுள்ள தொட்டிவிடும் - என்று
பித்த நிலையினிற் பாதுகை கைக்கொண்டு
பாரில் நடப்பவர் யாருமுண்டோ?

நாளை யொருதினம் நிச்சயமாய் வரும்
நன்மை வருமென யாரறிவார்? - என்றே
வேளை வருமென வீற்றிருந் தாரிங்கு
வேறு பயனொன்று கண்டதுண்டோ?

மாற்ற மெனுமது மண்ணின் இயல்பெனில்
மாறிப் பழையதாய் ஆகிலுமென்? - இன்னும்
ஏற்ற முறநன்மை எய்தி நிலைகொள்ள
என்றும் முயன்றதில் வென்றிடுவோம்.

Monday, April 20, 2015

மண்ணுக்கு வந்த மதி


அலைகடலின் கரைக்காற்றை அனுப வித்தே
... அருகமர்ந்த கோவலனைப் பாட வேண்ட
தலைமகளின் முகவழகுக் குவமை யாகத்
... தண்மதியைத் திருத்தியதோர் வடிவங் காட்டி,
கலைநங்கை மாதவியின் கையாழ் வாங்கிக்
... கவிபாடி இசைமழையைப் பொழியச் செய்தான்.
நிலைவரியாய் அமைந்ததது. நெஞ்சை யள்ளும்.
... நிகரெதுவும் இலையென்பேன் நீரும் ஏற்பீர்!

விழியிரண்டும் கயலென்றே யாகித் துள்ள
... விளங்குமிரு புருவங்கள் வில்லாய் மின்ன
பொழிமழைநீர் சூல்கொண்ட மேகம் போலப்
... பொலிவுமிகு கருமையினிற் குழலைத் தீட்டி
விழிகவரக் காமனவன் செயல்க ளெல்லாம்
... விடுதலிலை யெனமுழுதும் எழுதித் தீர்த்த
எழிலொழுகு திங்க(ள்)முகம் காணீர்! என்றே
... இளங்கோதன் தலைமகனைப் பாடச் செய்தார்.

திங்களெனில் வானத்தில் தானே தோன்றும்?
... திரிவதுவும் வானத்தில் தானே யன்றோ?
இங்குளதோர் திமில்வாழ்நர் சிற்றூர் தேடி
... எதுபணியாய் வந்ததென்று கேட்ப மென்றே
அங்குதிரி பகையரவு ராகு கேது,
... அதைவிழுங்க வருமென்றே எண்ணி நீங்கி
தங்கியிங்கு பயமின்றி வாழ வேடம்
... தரித்தபடி வந்ததென்று விடையும் சொன்னார்.


கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன்
செயலெழுதித் தீர்த்தமுகம் திங்களோ காணீர்!
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அங்கணேர் வானத்து அரவஞ்சி வாழ்வதுவே.


சிலப்பதிகாரம், புகார்க்காண்டம், - கானல் வரி.


பாரதி கலைக்கழகம். சிலப்பதிகார விழா.  21.9.2014

 

Wednesday, April 15, 2015

பெரிதினும் பெரிது கேள்


கற்றலில் நன்றாய்க் கேட்டலை நம்தமிழ்ச்
சொற்றொட ரொன்று சுவைபடக் கூறும்.
நூலறி மேலோர் நுண்மை விரித்துப்
பாலரு மறியப் பகர்வது கேட்டலை,
புவியுள அறிஞர் புலவோ ரெல்லாம்
செவிதரு 'கேள்விச் செல்வ'மென் றோதுவர்.
உயர்ந்ததைப் பெரிதென் றுணர்ந்தவ ரிங்கு
'உயர்ந்தவர் மேற்றே உல'கென் றுரைத்தார்.
உலகம் பெரிதெனப் பொதுவில் தொடங்கி
கவன மீர்த்துக் காண்டகு பெருமையில்
ஒன்றினி லொன்றாய் உயர்ந்தது காட்டி,
நன்றிது வென்று நாமதை யறிய
பண்டுநம் மவ்வை சொன்ன
தொண்டர்தம் பெருமை கேட்பது பெரிதே!

 

Friday, March 13, 2015

உணர்வார் இலையே!





களிகொண் டுளறுபவர் கள்ளுண்ட நிலை கண்டு
     கலங்கிநீ நின்ற தென்ன?
         கல்விதரு பள்ளிகற் கருகிலே கூடபல
             கடையின்று வந்த தென்ன?

வெளியா ரிலாதபடி விலைக்குமது அரசேற்று
     விற்பனை செய்வ தென்ன?
         உபவாச வழியெலாம் உதவாத நிலையின்று
             உருவாகிப் போன தென்ன?

எளிமையே உயர்ந்ததென ஏற்றுநீ போற்றியதை
     எவருமே ஏற்க விலையே!
          ஏழைக்கும் ராசனாய் எப்போதும் வாழ்கின்ற
             ஆசைக்கு மெல்லை யிலையே!

ஒளியாம லுண்மையினை யுரைப்பதே நலமென்ற
     உறுதியைப் போற்ற விலையே!
          உன்வாழ்வை காந்திநீ உலகுமுன் வைத்துமதை
                உணர்வாரு மொருவ ரிலையே!



கற்சிலையை வைத்தவர்கள் காசுபணம் பார்த்தவுடன்
     கைகழுவி விட்ட நிலையே!
          காகமிடு மெச்சமுன் கண்ணீராய் வீழ்வதனைக்
               கண்டுமனம் மாற விலையே!

விற்கின்ற பத்திரிகை வெளியிட்ட உன்படமும்
     வீணாகும் குப்பை நிலையே!
         வீதியிலே வடைசுற்றி விற்பதுதான் வேதனையே
                வேறுபய னாவ திலையே!

கற்றாரும் நீதந்த கைவேலை  விட்டதன்பின்
     கைராட்டை தோற்ற தையா!
         கண்கண்ட சத்தியம் காணாது போயின்று
              கபடமே வென்ற தையா!

பெற்றாளின் மேலான பெருமண்ணின் மேற்பக்தி
     பற்றாது போன தையா!
         பிறந்தநம் நாடதனின் பெருமையை யறியாத
              பேதைமை பெருகு தையா!


பாரதிகலைக் கழகம் . 13.10.2013