Wednesday, April 30, 2014

அறன் வலியுறுத்தல்


(திருக்குறட் கருத்து)


பெறத்தக்க பெரும் பேற்றில் வீட்டை நல்கும்
..பெற்றியது வேண்டியோர்க்கு நீளும் செல்வத்
துறக்கத்தை ஈயுமெனில் உயிர்க்கிங் காக்கம்
..தரத்தக்க வேறுளதோ அறத்தை யன்றி?
மறத்தலினால் வருங்கேட்டைக் கூடச் சொல்லி
..மண்ணுயிர்க்கு வழிகாட்டும் முப்பால் நூலோ
அறத்தியற்கை ஆக்கத்தை ஈதற் கொண்டே
..அதைச்செல்லும் வாயெல்லாம் செய்யச் சொல்லும்.


வாக்கென்றால் ஒலிவடிவிற் செவியிற் சேரும்.
..உடலியக்கம் காட்சியெனக் கண்ணில் தோன்றும்.
தேக்குகுறை பாடுடைய நெஞ்சின் வழிதான்
..தெரிக்கின்ற சொல்லோடு செயலும் போகும்.
நோக்கமுடன் பிறரறியச் செய்து வெறும்
..நாடகமாய் ஆவதுவும் அறமென் றாமோ?
நோக்கிலற மனைத்திற்கும் வித்தாய் நிற்கும்
..நெஞ்சத்துத் தூய்மைக்கு நிகரே இல்லை.


பல்லக்கின் பாரத்தைத் தோளில் ஏற்றிப்
..பாதையிலே பக்குவமாய்க் காலை வைத்து
வெள்ளமென உடல்முழுதும் வியர்த்தே ஊற்றும்
..வெம்மையிலே தரைச்சூட்டைத் தாங்கி நால்வர்
மெள்ளநடை தடுமாற, உள்ளே யொருவர்
..மெத்தையிலே சயனித்துச் செல்லல் இங்கே
உள்ளபடி அறத்தியல்பைக் காட்டுந் தானே?
..உணர்ந்தறிய நூலெதுவும் கற்றல் வேண்டாம்.


இன்னாச்சொல் லழுக்காறோ டாசை வெகுளி
..இவைநீக்கி, இயற்றுதலே அறமென் றாகும்.
பின்னரொரு காலத்திற் செய்வோ மென்னா(து)
..எப்போது மதைவிடாது செய்வோ மானால்
பொன்றுங்கால் அழியாத துணையாய் நிற்கும்.
..பிறவற்றால் இன்பமிலை புகழு மில்லை.
இன்னுமொரு பிறவிகருத் தடையாய் நின்று
..இன்பமறாப் பெருவீட்டில் அறமே சேர்க்கும்.


பாரதி கலைக்கழகக் கவியரங்கம் 20.6.2010.

Friday, April 25, 2014

குடலுண்டு குன்றிய கூடு








சுற்றம் மறந்ததோ? சூழ்வறுமை காரணமோ?
உற்ற துணையு மொதுக்கினளோ? - வற்றிக்
குடலுண்டு குன்றியதோர் கூடானாய் கண்டு
கடவுளரும் கண்கலங்கு மாறு.

(சந்த வசந்த இணையக் குழுமத்தில் யோகியார் அவர்கள் கேட்டிருந்தபடி புகைப்படத்துக்கு எழுதிய வெண்பா.)

Friday, March 07, 2014

வேறெதுவும் காரணமோ?



தந்தைதோள் சாய்ந்தசுகம்
...தலையணையில் இல்லையென
முந்தையநாள் கற்பனையில்
...மூழ்கிய முகவழகோ?

தெரியாத மனிதரிடைத்
...தெரிந்தவளாய்த் தாயவளின்
பரிவை முகந்தன்னில்
...பார்த்துவந்த புன்னகையோ?

விரித்துக் கையசைத்து
...விதவிதமாய் முகம்மாற்றி
சிரிப்பு வரவழைத்தார்
...சிறிதளவு வென்றாரோ?

கரியநிறப் பூச்சியொன்று
...கண்ணெதிரே வந்ததுவோ?
விரிந்தவிழி வியப்புக்கு
...வேறேதும் காரணமோ?

Wednesday, January 08, 2014

செல்வம்


கோடி தொகுத்தபினும்
கொண்டின்னும் கூட்டுதற்காய்
ஓடித் திரிவருளர்.
உள்ளதன்மேல்- நாடிடுமோர்
எண்ணமிலா துன்சிந்தை
என்றும் இருந்திடுமேல்
உண்மையதே செல்வம் உணர்.

(செல்வம் என்பது சிந்தையின் நிறைவே.)

Friday, November 15, 2013

எண்ணிய முடிதல் வேண்டும்


தினைத்துணை இருந்த போதே
...தெருவிலே ஆடும் நாளில்
நினைத்ததைச் செய்து காட்ட
...நெஞ்சிலே ஆசை கொண்டேன்.
மனையறம் கண்டு இன்று
...மயிரெலாம் நரைத்த பின்னும்
நினைத்ததை முடித்த லாற்றேன்.
...நிகழ்வதை ஏற்கின் றேனே!

அலவுதீன் விளக்குப் போலொன்
...றகப்படக் கூடு மாயின்
சுலபமாய்த் தேய்த்துப் பூதச்
...செயலினால் முடித்துக் கொள்வேன்.
இலையது கதைதான் என்றால்
...இயலுத லாமோ? நூலோர்
பலரிது பற்றிச் சொன்ன
...பகுதிகள் தேடிப் பார்த்தேன்.

திண்ணிய ராகப் பெற்றால்
...தெளிந்தநல் லறிவி ருந்தால்
எண்ணிய முடியு மென்றார்.
...ஏற்கிறேன். சரிதான். ஆனால்
திண்ணிய நெஞ்சை எங்கே
...தேடிநான் பெறுவேன்? எங்கே
எண்ணிநான் விலைக்கு வாங்க
...அறிவது கிடைக்கக் கூடும்?

Friday, October 25, 2013

சுட்ட பழம்



நாவற் பழம்சுவைக்க
நாஊற வாங்கவிலை
ஆவலுடன் கேட்டே
அதிர்வுற்றேன். - நாவலிது
சுட்டபழம் கையைச்
சுடத்தானே செய்யுமெனக்
கட்டியவள் கேட்டாளே காண் !

பழத்தின் பெயரில் தொடங்கும் வெண்பா.
அமுதசுரபி செப்.2012. வெண்பாப் போட்டி.
3-ம் நிலையில் தேர்வு பெற்ற வெண்பா.

Thursday, October 17, 2013

ஒட்டியுறுவார் உறவு


நாற்றிசையும் கரையமைந்தே ஊரி னோரம்
...நிழல்மரங்கள் வரிசையுற நிற்க, நல்ல
நாற்றமுள வண்ணமலர்ச் செடிக ளெல்லாம்
...நாற்புறமும் இடையிடையே வளர்ந்தி ருக்கும்.
தோற்றத்தில் பொலிவுடைய குளமுண் டதனில்
...தாமரையோ டாம்பலுமே பூத்தி ருக்கும்!
காற்றினிலே விரித்திறகை, பறந்து வந்து
...கரையமரும் பறவையினம் காட்சிக் கின்பம்!


சுற்றிவரு பருவநிலை மாறி, வெய்யில்
...சுட்டெரிக்கும் கோடையிலே நீர்மை குன்றி,
அற்றநீர்க் குளக்காட்சி அழகு மாறும்.
...அகன்றுவிடும் பறவையினம் நில்லா தங்கே.
வற்றியவாய் நீர்க்கொடிகள் மலர்க ளோடு
...வாடிநிலை தாழ்ந்திடினும், தங்கி நிற்கும்.
உற்றதுயர் கண்டவுடன் விலகு வோர்கள்
...உறவினரென் றழைப்பதற்கே ஏற்றாரில்லை.


'வா'வென்றே அழைக்காமல் தாமாய் வந்து,
...வகைவகையாய் உறவுபெயர் சொல்லி, நாளும்
'தா'வென்று பொருளுளநாட் சுற்ற மாகித்
...தமைவளர்க்கும் தகைமையுளோர், அற்ற நாளில்
'போ'வென்றே யுரையாத போது விட்டுப்
...போய்விடுவர் என்பதற்குப் பொருத்த மாக
ஆயவ்வை நீர்ப்பறவை நீங்கல் சொன்ன
...அழகான உவமைக்கிங் கீடே இல்லை.


அற்ற குளத்தி னறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வா ருறவல்லர். - அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவா ருறவு.      (ஔவையார்)

பாரதி கலைக்கழகம் -ஔவை விழா. (23.2.2013)  மூதுரைப் பாடற் பொருள்.
கவி அமுதம். மே -2013. இலக்கியவேல்- ஜூலை 2014

Friday, September 27, 2013

ஏழு முதல்...


பாலனாய் ஏழினில்
பால்நிறக் கோலியொடு
பாதை யோரமே திரிந்தேன்.

பார்ப்பவர் ஏசுவது
பாராது நாள்முழுதும்
பம்பரம் சுழற்றி நின்றேன்.

பாலனெனும் நிலைமாறிப்
பதினைந்தி லேதிரைப்
படங்களை ரசித்தி ருந்தேன்.

படிப்பினைப் பசியினைப்
பாராமல் எந்நாளும்
பாடலில் லயித்தி ருந்தேன்.

காலமது இனுமோடிக்
கடந்தபின் முப்பதில்
காதலே பெரிதென் றிருந்தேன்.

கைநிறையப் பொருள்வேண்டிக்
களைப்பென்று பாராது
கடுமையாய் உழைத்தி ருந்தேன்.

கோலியொடு பம்பரம்
காதல்பொரு ளாசையெலாம்
காணாது மறைந்த தின்று.

கடவுளது சந்நிதிமுன்
கைகூப்பி நிற்கையில்
கணநேர நெகிழ்வு நன்று.


பாரதி கலைக்கழகக் கவியரங்கம். 15.8.2012

Monday, September 23, 2013

சித்திரை கொண்டுவரும் சீர்.



விதிதன்னை நொந்து
விலைவாசி ஏறக்
கதியின்றித் துன்பமுறும் காலம்.- புதிதாக
இத்தரையில் இப்போ(து)
எதுவானால் தானென்ன
சித்திரை கொண்டுவரும் சீர்?

 வெண்பாப் போட்டியில் 3ம் நிலையில்
 தேர்வு பெற்ற வெண்பா.  அமுதசுரபி ஏப். 2012

Wednesday, August 28, 2013

லட்டு தின்போம்


(சிறுவர் கவிதை)

மூன்று பேராய் நாமிருக்க
மொத்த லட்டு மூன்றிருக்க
மூன்றை ஆளுக் கொன்றெடுத்து
முழுது முழுதாய்த் தின்போமே!

நான்கு பேராய் நாமிருக்க
நல்ல லட்டு மூன்றிருக்க
மூன்றை நாலாய்ப் பங்குவைத்து
முக்கால் முக்கால் தின்போமே!

ஆறு பேராய் நாமிருக்க
அழகு லட்டு மூன்றிருக்க
ஆறு பேரும் பங்குவைத்தே
அரையாய் அரையாய்த் தின்போமே!

பன்னி ரண்டு பேரிருக்க
பாகு லட்டு மூன்றிருக்க
சின்ன தாக்கிக் கால்காலாய்ச்
சேர்ந்தே அதனைத் தின்போமே!

நெஞ்சில் அன்பு மிக்கோராய்
நிறைய நன்பர் வருவரேல்
கொஞ்சம் கொஞ்சம் கிள்ளிவைத்துக்
கூடித் தின்று மகிழ்வோமே!

பாரதி கலைக்கழகம். அழ. வள்ளியப்பா நினைவுக்
கவியரங்கம். குரோம்பேட்டை. நவ.2011.

Monday, August 26, 2013

சுதந்திரத் தேவி தாயே!


 
உண்மைகள் வாழவும்
……....உறுதுயர் ஒழியவும்
……….........உலகினில் ஒழுக்க மோங்கவும்
......உனதரும் புதல்வரில்
……......உயர்புகழ்க்  காந்திபோல்
………........உத்தமர் ஒருவர் வேண்டும்.
 

உன்னவர் நடுவிலே
………...ஊழலும் லஞ்சமும்
.................ஒழிந்திடப் பாடவேண்டும்
……..உறையிருள் மறைந்து
.............ஒளிபெறப் பாரதி
…………………ஒருவனும் இன்று வேண்டும். 
 

எண்ணிய முடிக்கவும்
...........எதிர்பகை வீழ்த்தவும்
.................இளையவர் தலைமு றைக்கு
……. ஆற்றலும் வீரமும்
.............அஞ்சாத நெஞ்சமும்
......................அமையநீ அருள வேண்டும்.

சென்னியிற் குங்குமம்
..........செவ்விதழ்ப் புன்னகை
....................சிறந்திடுங் கருணை மாதே!
……..சத்தியப் பேரொளி
.............சமத்துவ நாயகீ!
...................சுதந்திரத் தேவி தாயே!
 
'நம் உரத்தசிந்தனை' மாத இதழ். ஆக.2013

 

 

 

மாற்றிடுவோம்

(சிறுவர் கவிதை)


வீசும் கற்றில் பெருந்தூசி
வீதியில் குப்பை கூளங்கள்
நாசியில் வீசும் துர்நாற்றம்
நகரங்களிலே இன்றுண்டு.
பாசிபடரும் வகையினிலே
பலநாள் தேங்கி நீர்நின்று
மோசம் விளைக்கும் நோய்பரப்பும்
மொய்க்கும் கொசுவின் உற்பத்தி.


ஓடும் கார்கள் சாலைகளில்
ஓசை செய்கிற பேரிரைச்சல்.
நாடு முழுதும் ஆலைகளின்
நச்சுக் கழிவின் ஆபத்து.
ஓடி ஒளிய நினையாதீர்.
உலகம் முழுதும் இப்படித்தான்.
கோடிக் கணக்கில் இருக்கின்றோம்
கொஞ்சம் முயன்று மாற்றிடுவோம்.


தினமணி.- சிறுவர் மணி. 19.12.1999.

 

நீ வாழ்க!

(பின்முடுகு நேரிசை வெண்பா)


வேண்டித் தமிழ்கேட்டாய் வெண்பாவிற் பின்முடுகாய்
நீண்ட நெடுநாள்கள் நீவாழ்க - ஈண்டு
மலையு மலையு மதியு மொளியு
முலகி னிலவு மளவு.


'தெளிதமிழ்' மாத இதழ் - ஜனவரி 2004

 

பட்டங்கள் பெற்ற பயன்


சட்டியிலே சோறாக்கச் சற்றேனும் கற்றிருந்தால்
கட்டியவ ளேனும் களிப்புறுவாள் - முட்டாளாய்,
எட்டாது வேலையெனில் ஏதேனும் வேறுண்டோ
பட்டங்கள் பெற்ற பயன்?


மின்னல் தமிழ்ப்பணி இதழ்- டிசம்பர் 2012. பரிசு பெற்றது.

Monday, July 29, 2013

பரத நம்பி



'முன்னவ னிருக்கப் பின்னோன் மணிமுடி தரித்த லாகா
தென்னுமோர் முறையுண் டெனினும் எனதுளம் வருந்தா தவனே
நின்னினும் நல்லன்' என்றும்' நிறைகுணம் கொண்டோ' னென்றும்
அன்னைகோ சலைதன் வாயால் அன்னலுக் குரைக்கக் கண்டோம்.

தாயுரை கொண்டு தாதை தனக்கென ஈந்த வாழ்வை
தீயது என்று விட்ட திறமதைக் கண்டு வேடன்
ஆயிர மிராமர் நின்கே ழாவரோ? என்று கேட்ட
வாயுரை கொண்டுங் கம்பன் வரதனைப் போற்றக் கண்டோம்.

மன்னனாய் ராமன் மீண்டு மணிமுடி சூடக்காண
எண்ணிய பரதன் நெஞ்சத் தெளிமையை அன்பைக் கண்டு
'மன்புகழ் பெருமை நுங்கள் மரபுளோர் பெருமை யெல்லாம்
உன்புக ழாயிற்' றென்றே உரைத்தது முண்மை தானே?

தந்தையின் வாக்கைக் காக்கத் தாங்கரு கானம் புக்கோன்
முந்தையன் சேவைக் கென்றே முயன்றுபின் சென்ற தம்பி
சிந்தையில் ராமன் நிற்கச் சேவடி சிரமேற் கொண்டு
வந்தனை செய்தவ் விருவர் வழியினைப் பரதன் வென்றான்.


'ஒழுக்க நெறிநிலை உலகினர்க் குணர்த்த
தந்தையர் தமக்கு மைந்தர்செய் பணிமுதல்
பொதுவற மெல்லாம் புரிந்தன னிராமன்.
அப்பணி தானும் அடைவு கெடாமை
ஒப்பறு திருமால் ஒருவனுக் கென்றே
சிறப்பறம் தலைக்கொடு செய்தன னிலக்குவன்.
அவ்வறந் தானும் செவ்வற மாதல்,
செங்கண்மால் உவந்த சேவடித் தொழும்பே
அல்லது தனகொன் றில்லையென் றாய்த்து
பரதந் திரநெறி பற்றினன் பரதன்'. ...... ...- திரு.நா. அப்பனையங்கார்


பாரதி கலைக் கழகம் - கம்பர் விழா. 9.8.2009

Friday, June 07, 2013

குறள் வானில் நிலவு


பெண்ணொருத்தி முகத்தழகுக் குவமை யாகப்
...பேரெழில்வான் முழுநிலவைச் சொல்லு தற்கு
விண்ணிலுலா வருகின்ற மீன்க ளெல்லாம்
...வீசுமொளி வெண்மதியோ டியங்கும் போது
மண்ணிலுமோர் நிலவுமுகம் நகரக் கண்டு
...மயங்கிவழி தடுமாறி நின்ற தாக
மண்ணிதனில் வானத்தைக் காட்டு கின்ற
மனங்கவரும் கவிதையினைக் குறளில் கண்டேன்.

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன்.   (குறள்)



மலரிதழ்போல் விரிந்தகன்ற விழிகள் கொண்ட
...மாதரசி அழகுமுகம் உனக்குண் டாயின்
உலவுகின்ற மேகத்தை இழுத்துப் போர்த்தி
...உன்முகத்தை மறைத்துக்கொள் ஒருபோ தும்நீ
பலர்காணும் படிவானில் திரிய வேண்டாம்
...பார்ப்பவரின் கண்படுமென் றொன்றில் கண்டேன்.
நிலவுவந்து வள்ளுவத்தில் நின்று லாவும்
...நெஞ்சுநிறை கவிவரிகட் கீடே இல்லை.

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.   (குறள்)

வாசல் கவியரங்கம்  7.12.2008

Friday, March 08, 2013

மாதரைப் போற்றுகின்றேன்



விண்ணியல் தெளிந்தோ ருண்டு
...வேதியல் முதலா யுள்ள
எண்ணிலா வகையி லின்று
...இயங்கிடுந் துறைக ளூடே
பெண்ணிலா தேது முண்டோ?
...பெருமையில் மிக்கோ ராக
மண்ணிலே வாழு கின்ற
...மாதரைப் போற்று கின்றேன்.


நுண்ணறி வோடு கூட
...நூல்பல கற்ற போதும்
பெண்ணறி வென்ப தென்றும்
...பேதமை மிக்க தென்று
முன்னவர் சொன்ன சொல்லை
...முழுவதும் பொய்யென் றாக்கி
மண்ணிலே வாழு கின்ற
...மாதரைப் போற்று கின்றேன்.


பெண்மையே அன்பின் தோற்றம்.
...பிறந்துள உயிர னைத்தும்
பெண்மையின் ஜீவ ஊற்று.
...பெண்மையே உலக வித்து.
பெண்மையே விளங்கு கின்ற
...பெரியதோர் சக்தி தெய்வம்.
மண்ணிலே வாழு மந்த
...மாதரைப் போற்று கின்றேன்.


பாரதி கலைக்கழகம். 21.3.2010

Sunday, March 03, 2013

கவிதை இன்பம்



நீலக் கடலதன் நீரென ஓர்கவி
...நெஞ்சில் அலைவிரிக்கும் - அதைக்
காலைக் கதிரவன் கைதொடு போதுபோற்
...கண்ணில் பளபளக்கும்.

சிந்தை கவரொரு சிட்டுக் குருவியைச்
...சித்திர மாய்வடிக்கும் - கவி
விந்தை மனம்முன்னர் வீழ்ந்து கிடந்தது
...விண்ணிற் சிறகடிக்கும்.

தீர்த்தக் கரையினில் தென்றற் சுகமொடு
...தீங்கனி உண்பதுபோல் - கவி
பார்க்கும் படியில்லாப் பாதை நடையிலும்
...பாடச் சுவைகிடைக்கும்.

பூத்த மலர்வனப் பூவின் நறுமணம்
...பாடல் நிறைத்துவிடும் - நெஞ்சில்
கோத்துத் தொடுத்திட்ட கொஞ்சு தமிழ்க்கவி
...கோலம் வரைந்துவிடும்.

சந்த மழைவந்து சற்றுப் பொழிந்திடில்
...சிந்தை மயக்கிவிடும் - கவி
தந்த பொருளதில் மின்னல் இடிவந்து
...தங்கி நிலைத்துவிடும்.

பாரதி கலைக்கழகம் - கவிமாமணி சவகர்லால் பவள விழாக் கவியரங்கம். 20.8.2011

Monday, February 25, 2013

தலைசுற்றும் விலைவாசி


அதிகரித்த பணவீக்கத் தோடு கூட
...அடுத்தடுத்துச் சரிந்துவிழும் பங்குச் சந்தை
புதியதொரு வலையூக வணிகம் மற்றும்
...பூலோகம் முழுவதையும் ஆட்டி வைக்கும்
புதிரெண்ணெய் விலையேற்றம் எல்லாம் சேர்ந்து
...பெரும்பாரம் தலைசுமந்து தாங்கிக் கொண்டு
விதிதன்னை நொந்தபடி இருத்த லின்றி
...வேறென்ன செயயியலும் நம்மா லிங்கு?


பொருளறியாச் சொற்றொடரால் நாளே டெல்லாம்
...புதுப்புதிதாய் விளக்கங்கள் எழுதி னாலும்,
ஒருவழியு மறியாம லாட்சி செய்வோர்
...விழிபிதுங்கி நிற்கின்ற நிலையைக் கண்டோம்.
வருமான மோரளவு உள்ள பேரின்
...வாழ்நிலையே மிகத்தாழ்ந்து போன தென்றால்
வருமானம் குறைந்தவர்கள் மற்று முள்ள
...வறியவர்கள் உயிர்வாழ்தல் எங்க னேயோ? 

Tuesday, January 15, 2013

பொங்குகவே பொங்கல் பொலிந்து!


ஆற்றின் வடிகாலும் ஏரும் உழவோரின்
சேற்றில் பதிகாலும் செங்கதிரும் - ஏற்றமுறத்
தங்கிநிலை பெற்றுத் தமிழர் நலஞ்சிறக்கப்
பொங்குகவே பொங்கல் பொலிந்து!

வெண்பாப் போட்டியில் தேர்வு பெற்ற வெண்பா.
அமுதசுரபி  -ஜனவரி 2013.