Saturday, April 26, 2025
நாமம் சொல்ல நியதி இல்லை
ஏதும் நியதியிலை எம்பெருமான் நாமம்நாம்
ஓதும் பொழுதே உயர்தருணம் – பாதையிலே
கல்லிடறிக் காயமுறுங் காலம்மா வென்றொருசொல்
சொல்லச் சடங்குண்டோ சொல்.
நாமம் சொல்ல நியதி இல்லை என்கிற தலைப்பிலான முகநூல் கட்டுரைக்காக 7.4.2020 ல் எழுதியது
ப.கே 52 ஈடில்லை
எந்த இறையுருவும் என்மனதில் வந்துறையும்
கந்தனெனச் சொன்ன கவிஞரவர் --- செந்தமிழ்நா
பாடிக் குவிக்கின்ற பக்திப் பனுவற்கே
ஈடிங் கிலையென்பேன் யான்
முதுபெருங்
கவிஞர் கவிமாமணி புதுவயல் நா.செல்லப்பன் அவர்களுடைய, வயலூர் முருகன் மீதான வெண்பா மாலையைப்
படித்து, மகிழ்ந்தெழுதியது 16.1.2019
Wednesday, April 23, 2025
வாழ்க வாழ்க!
புதுகைத் தென்றல் ஆசிரியர் திரு. மு. தருமராசன் அவர்களின் 80 ஆண்டு நிறைவு
வாழ்த்துப்பா.
பெருமதிப்பிற் பணம்புழங்கிப்
பெருகிவளர் வங்கியெனும்
திருமகளின் உறைவிடத்துத்
தினம்சென்று பணியாற்றி
வருபொருளால் வாழ்வியற்றல்
வாய்த்திருந்தார்! செந்தமிழ்த்தாய்
அருளுடைமை காண்வகையில்
ஆற்றொழுக்காய் எழுதவல்லார்!
பணியிலுளோர் உரிமைக்காய்ப்
பலதடவை குரல்கொடுத்த
துணிவுடைய தலைவரெனத்
துலங்கியவர். பண்புமிக்கார்.
இணைபிரியாத் துணைவியொடு
இருவருமாய் மனமுவந்து
அணுகுபவற் குதவிசெயும்
அருமையான தம்பதியர்.
எதுவரையிற் கதிருளதோ
எதுவரையில் மதியுளதோ
அதுவரையில் இறையருளால்
அமையுமுடல் நலமுடனே
இதுவரையில் அடைந்தபுகழ்
இனும்மிகுந்து
வளர்வகையில்
புதுகைநகர்த் தருமராசன் -
பானுமதி வாழ்கவாழ்க!
தருமராசன்
80 நிறைவு மலரில் வெளியானது.