Sunday, June 07, 2020

பாவும் திருமணமும் (சிலேடை)



சீருண் டடியுண்டு செய்த பொருள்தெரியும்
சேருந் தளையால் சிறப்புண்டு – காரிகையே
மாவின் கனிகாய் மரபுவழி உண்டதனால்
பாவும் திருமணந்தான் பார்.

மரபுப் பாடலுக்கு:
சீருண்டு: மாச்சீர், விளச்சீர் என்று பலவகையாய்ச் சீர்கள் உண்டு.
அடியுண்டு: அளவடி, சிந்தடி, குறளடி, கழிலடி, கழிநெடிலடி என்று உண்டு.
செய்த பொருள் தெரியும்: செய்த பாடலின் பொருள் பாட்டில் வெளிப்படும்.
சேரும் தளையால் சிறப்புண்டு: சரியான தளைகள் அமைத்துப்பாடும் போது மரபுப்பாக்கள் சிறப்படைகின்றன.
மாவின் கனிகாய் உண்டு: தேமாங்காய், தேமாங்கனி போன்ற மூவசைச்சீர்கள் வருவதுண்டு.
மரபுவழி உண்டு: இப்படித்தான் இயற்றப்படவேண்டும் என்று இலக்கண மரபுகள் உண்டு.

காரிகையே!: தனிச்சொல். மகடூஉ முன்னிலை.

திருமணத்துக்கு:
சீருண்டு: சீர்வரிசைகள் உண்டு.
அடியுண்டு: திருமண நிகழ்வில் சப்தபதி என்று அக்னியைச் சுற்றி வலம் வரும் சடங்கு உண்டு.
செய்த பொருள் தெரியும்: தம்செல்வச்செழிப்பைப் பலரும் அறியும்படி ஆடம்பரமாக நிகழ்த்துவர்.
சேரும் தளையால் சிறப்புண்டு: மணமக்களிடையே சிறந்ததான புதிய பிணைப்பு உண்டாகிறது.
மாவின் கனிகாய் உண்டு: விருந்தில் மாங்கனியும், மாங்காயும் படைப்பதுண்டு.
மரபுவழி உண்டு: மூதாதையர்கள் செய்துவந்தபடி, எல்லாச் சடங்குகளையும் வழக்கம் மாறாதபடி செய்வர்.

      ஆக, மரபுக் கவிதையும் திருமணமும் ஒன்று என்றபடி. 

No comments: